வறுமையை ஒழிப்போம் என கூறி தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மக்களை ஏமாற்றுகிறது ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு


வறுமையை ஒழிப்போம் என கூறி தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மக்களை ஏமாற்றுகிறது ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 April 2019 11:15 PM GMT (Updated: 15 April 2019 7:01 PM GMT)

வறுமையை ஒழிப்போம் என கூறி தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மக்களை ஏமாற்றுவதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டி உள்ளார்.

திருவாரூர்,

அ.தி.மு.க. சார்பில் திருவாரூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் ஜீவானந்தம், நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தாழை சரவணன் ஆகியோருக்கு ஆதரவாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகே பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் நலன் காக்கப்படுவதுடன், சிறப்பான முன்னேற்றம் அடைந்து வருகிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருகின்ற அரசாக பா.ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது. அதனை கருத்தில் கொண்டுதான் அ.தி.மு.க. தலைமையிலான மெகா கூட்டணியை தமிழகத்தில் ஏற்படுத்தி உள்ளனர். இந்த கூட்டணி தமிழகத்துக்கு 100 சதவீதம் நலனை அளிக்கும்.

பா.ஜனதா கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றால் இந்தியாவை வல்லரசாக்கும். இது நாட்டின் எதிர்காலத்தை முடிவு செய்கிற தேர்தல். எனவே வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். ஏழை-எளிய மக்கள், விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் அணி அ.தி.மு.க. கூட்டணி மட்டும் தான்.

ஆட்சி காலத்தில் ஏழை, எளிய மக்களை பற்றி காங்கிரஸ் கட்சி சிந்திக்கவில்லை. ஆனால் தற்போது வறுமையை ஒழிப்போம் என கூறி தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மக்களை ஏமாற்றுகிறது. மீண்டும் பா.ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்துவிடும் என்பதை உணர்ந்து, வறுமையை ஒழிப்போம் என மக்களை ஏமாற்ற பார்க்கின்றனர். அ.தி.மு.க. அனைத்து தரப்பு மக்களும் பயன் அடையும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே திருவாரூர் சட்டசபை தொகுதி வேட்பாளர் ஜீவானந்தம், நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தாழை சரவணன் ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரசாரத்தின்போது அமைச்சரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான காமராஜ், த.மா.கா. மாவட்ட தலைவர் குடவாசல் தினகரன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் சண்முகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தஞ்சை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணியின் த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.நடராஜனை ஆதரித்து நீடாமங்கலம் பெரியார் சிலை அருகில் திறந்த வேனில் நின்றபடி ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவருடன் திருவாரூர் மாவட்ட தலைவர் தினகரன் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.

Next Story