தி.மு.க. கூட்டணிக்கு வாக்கு அளித்தால் அராஜக அரசியலுக்கு வழி வகுத்து விடும் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு


தி.மு.க. கூட்டணிக்கு வாக்கு அளித்தால் அராஜக அரசியலுக்கு வழி வகுத்து விடும் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 15 April 2019 11:00 PM GMT (Updated: 15 April 2019 7:05 PM GMT)

தி.மு.க. கூட்டணிக்கு வாக்கு அளித்தால் அராஜக அரசியலுக்கு வழி வகுத்துவிடும் என்று பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

தர்மபுரி,

தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தர்மபுரி நகரில் மதிகோன்பாளையம், வேல்பால் டிப்போ, குமாரசாமிப்பேட்டை, எம்.ஜி.ஆர். நகர், பிடமனேரி, பஸ் நிலையம், எஸ்.வி.ரோடு, அன்னசாகரம், இலக்கியம்பட்டி, அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

வலிமையான பாரதத்தை உருவாக்கவும், வளமான தமிழகத்தை உருவாக்கவும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது தலைமையிலான மாநில அரசும் தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திட அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். நான் கடந்த 5 ஆண்டுகளாக தர்மபுரி தொகுதி எம்.பி.யாக கடமையாற்றி உள்ளேன். இந்த 5 ஆண்டுகளில் எங்காவது நான் அராஜக அரசியலில் ஈடுபட்டேனா? எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் எங்காவது கட்டப்பஞ்சாயத்து அரசியலில் ஈடுபட்டார்களா? என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். தி.மு.க. கூட்டணிக்கு வாக்கு அளித்தால் அராஜக அரசியலுக்கு வழிவகுத்து விடும்.

பா.ஜனதாவுடன் அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் கூட்டணி சேர்ந்து விட்டதால் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என்று எதிர்க்கட்சியினர் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். சிறுபான்மையின மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. அவர்களுக்கு, என்றும் நாங்கள் உறுதுணையாக இருப்போம். தர்மபுரி மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காக நானும், இந்த மாவட்டத்தின் அமைச்சர் கே.பி.அன்பழகனும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம். தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றி அராஜக அரசியலில் ஈடுபடலாம் என்று துடிக்கிறார்கள். அவர்களுக்கு இந்த தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

இந்த பிரசாரத்தின் போது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல், அ.தி.மு.க. நகர செயலாளர் குருநாதன், முன்னாள் நகராட்சி தலைவர் சுமதி, பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஷ்வரன், முன்னாள் எம்.பி. பாரிமோகன், மாநில செயற்குழு உறுப்பினர் நம்பிராஜன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் தம்பி ஜெய்சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர், பா.ஜனதா மாவட்ட தலைவர் வரதராஜன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story