கஜா புயலால் தொழில் பாதிப்பு: மீன்பிடி தடை காலத்தை ரத்து செய்ய வேண்டும் மீனவர்கள் வலியுறுத்தல்


கஜா புயலால் தொழில் பாதிப்பு: மீன்பிடி தடை காலத்தை ரத்து செய்ய வேண்டும் மீனவர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 April 2019 11:00 PM GMT (Updated: 15 April 2019 7:32 PM GMT)

கஜா புயலால் மீன்பிடி தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் மீன்பிடி தடை காலத்தை ரத்து செய்ய வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 246 விசைப்படகுகள் மூலமாக மீன்பிடி தொழில் நடைபெற்று வந்தது. இதில் கஜா புயலில் சிக்கி பெரும்பாலான விசைப்படகுகள் சேதம் அடைந்தன. இதன் காரணமாக கடந்த 5 மாதங்களாக தஞ்சை மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.

புயலால் சேதம் அடைந்த படகுகளை சீரமைப்பு செய்து ஒருசில மீனவர்களே தற்போது கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரு கிறார்கள். பெரும்பாலானவர்கள் தொழிலுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முதல் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வருகிற ஜூன் மாதம் 13-ந் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாது.

படகுகள் சேதம் அடைந்ததால் தொழில் பாதிக்கப்பட்டு மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தடை காலம் அமல்படுத்தப்பட்டு இருப்பது மீனவர்களை வேதனை அடைய செய்து உள்ளது. தடை காலத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து விசைப்படகு மீனவர்கள் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் கூறியதாவது:-

சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் புயலில் சேதம் அடைந்த 54 விசைப்படகுகளுக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது தஞ்சை மாவட்டத்தில் 108 விசைப் படகுகளில் மட்டுமே கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் முழுமையாக சேதம் அடைந்த 134 படகுகளுக்கு 5 மாதங்களாகியும் நிவாரணம் வழங்கப்படவில்லை.

புயலுக்குப்பின் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து விட்டனர். எனவே மீன்பிடி தடை காலம் தேவையற்ற ஒன்று. இதுவரை நிவாரணம் வழங்காத 134 படகுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கி, மீன்பிடி தடை காலத்தை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story