தொலைநோக்கு திட்டங்கள் கிடைத்திட அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் ராசிபுரத்தில் அன்புமணி ராமதாஸ் பிரசாரம்


தொலைநோக்கு திட்டங்கள் கிடைத்திட அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் ராசிபுரத்தில் அன்புமணி ராமதாஸ் பிரசாரம்
x
தினத்தந்தி 15 April 2019 9:45 PM GMT (Updated: 15 April 2019 7:37 PM GMT)

தொலை நோக்கு திட்டங்கள் கிடைத்திட அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள், என்று கூறி ராசிபுரத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரசாரம் செய்தார்.

ராசிபுரம், 

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் பா.ம.க. இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். இந்த கூட்டத்திற்கு பா.ம.க. மாநில துணை தலைவர் வடிவேலன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் காளியப்பன் வரவேற்றார். மாநில துணை பொதுச்செயலாளர் பொன் ரமேஷ் முன்னிலை வகித்தார்.

இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா, பா.ம.க. முன்னாள் எம்.பி. தன்ராஜ் ஆகியோர் பேசினார்கள்.

இந்த பிரசாரத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமைவதற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு பெரும் பங்கு உண்டு. அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் இல்லாவிட்டால் இந்த கூட்டணி அமைந்திருக்காது. அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பிரதமர் மோடி, முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், டாக்டர் ராமதாஸ், விஜயகாந்த் உள்பட அனைவரும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஆனால் ஸ்டாலின் கூட்டணியில் பெரும் முதலாளிகளும், சாராய அதிபர்களும்தான் உள்ளனர். ஸ்டாலினுக்கு விவசாயம் தெரியாது.

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், தொலைநோக்கு திட்டங்கள் கிடைக்கவும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்யக்கூடிய எங்களால்தான், கொடுக்கும் வாக்குறுதிகள், திட்டங்களை நிறைவேற்ற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் இ.கே.பொன்னுசாமி, பா.ம.க. ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு செயலாளர் ஓ.பி.பொன்னுசாமி, பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினர் ஆ.மோகன்ராஜ், பா.ம.க. மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் பாலு மற்றும் அ.தி.மு.க., பா.ஜ.க. உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பனுக்கு ஆதரவாக அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி நாமக்கல் ராமாபுரம்புதூர், குட்டைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர், அ.தி.மு.க.வின் சாதனை திட்டங்கள் தொடர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அவருடன் வேட்பாளர் காளியப்பனின் மகள் பாலாமணி, மருமகள் ரேவதி ஆகியோர் உடன் சென்றனர்.

Next Story