தேர்தலில் அச்சமின்றி வாக்களிக்க மத்திய துணை ராணுவ படைவீரர்கள், போலீசார் கொடி அணிவகுப்பு


தேர்தலில் அச்சமின்றி வாக்களிக்க மத்திய துணை ராணுவ படைவீரர்கள், போலீசார் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 15 April 2019 11:00 PM GMT (Updated: 15 April 2019 7:53 PM GMT)

தேர்தலில் அச்சமின்றி வாக்களிக்க மத்திய துணை ராணுவ படைவீரர்கள், போலீசார் கொடி அணிவகுப்பை நடத்தினர்.

பெரம்பலூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கும், குன்னம் சட்டமன்ற தொகுதி சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கும் உட்பட்டவையாகும். இந்த 2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இறுதிக்கட்ட பிரசாரம் செய்து பொதுமக்களிடையே வாக்கு சேகரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 652 வாக்குச்சாவடி மையங்களில் 3,190 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். வாக்குப்பதிவு அன்று பெரம்பலூர் மாவட்டத்தில் 334 போலீசாரும், 200 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

மேலும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படையின் 3 கம்பெனியை சேர்ந்த (தலா 85 பேர்) 255 மத்திய துணை ராணுவ படைவீரர்கள் நேற்று முன்தினம் ரெயில் மூலம் திருச்சி வந்து, அங்கிருந்து வாகனங்களில் பெரம்பலூருக்கு வந்தனர். இதையடுத்து தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியும், அச்சமின்றி வாக்களிக்கலாம் என்பதனை வலியுறுத்தியும் மத்திய துணை ராணுவ படைவீரர்கள், போலீசார் சார்பில் பெரம்பலூரில் நேற்று காலையில் கொடி அணிவகுப்பு நடந்தது. பெரம்பலூர் பாலக்கரையில் ரவுண்டானாவில் இருந்து தொடங்கிய அணிவகுப்பினை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் தொடங்கி வைத்து, அணிவகுப்பில் நடந்து சென்றார்.

இந்த அணிவகுப்பில் கலந்து கொண்ட துணை ராணுவ படைவீரர்கள் துப்பாக்கிகள் ஏந்தியும், பாதுகாப்பு கவசங்கள் ஏந்தியும் ஊர்வலமாக சென்றனர். இந்த அணிவகுப்பு ரோவர் வளைவு, சங்குப்பேட்டை, காமராஜர் வளைவு, பழைய பஸ் நிலையம் வழியாக சென்று அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு நிறைவடைந்தது. இதையடுத்து துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பதற்றமானது என கண்டறியப்பட்ட 73 வாக்குசாவடி மையங்களில் வாக்குப்பதிவின் போது மத்திய துணை ராணுவ படைவீரர்கள் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் வேப்பந்தட்டையில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் எந்தவித அச்சமும் இன்றி வாக்களிக்கலாம் என்பதை வலியுறுத்தும் வகையில் பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவீந்திரன் தலைமையில், துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு அணிவகுப்பைநடத்தினர். வேப்பந்தட்டை பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த ராணுவ அணிவகுப்பு ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பின்னர் மீண்டும் பஸ் நிலையம் வந்தடைந்தது.

Next Story