‘ஓ.பன்னீர்செல்வம் விரைவில் சிறைக்கு செல்வார்’ - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பரபரப்பு பேச்சு


‘ஓ.பன்னீர்செல்வம் விரைவில் சிறைக்கு செல்வார்’ - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 15 April 2019 10:45 PM GMT (Updated: 15 April 2019 7:53 PM GMT)

ஓ.பன்னீர்செல்வம் விரைவில் சிறைக்கு செல்வார் என்று தேனி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசினார்.

தேனி,

தேனி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று ஆண்டிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட மேக்கிழார்பட்டி, ஏத்தக்கோவில், கன்னியப்பபிள்ளைப்பட்டி, கொத்தப்பட்டி, ராஜதானி, தெப்பம்பட்டி, பாலக்கோம்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வாக்கு சேகரித்தார்.

அவருடன் காங்கிரஸ் மாவட்ட தலைவர் முருகேசன் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளும் இருந்தனர்.

கன்னியப்பபிள்ளைப்பட்டியில் நடந்த பிரசார கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது:-

நான் வாக்கு சேகரிக்கச் செல்லும் ஒவ்வொரு ஊரிலும் மக்கள் வெற்றி விழாவுக்கு வரவேற்பது போன்று வரவேற்பு அளிக்கின்றனர். இதை பார்க்கும் போது வெற்றி உறுதியாகி விட்டதாகவே தெரிகிறது. நாங்கள் பொய் சொல்லியோ, காசு கொடுத்தோ ஓட்டு வாங்க மாட்டோம்.

ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு போக வேண்டிய நேரம் வந்து விட்டது. வீட்டுக்கு போனாலும் அவரால் நிம்மதியாக இருக்க முடியாது. விரைவில் சிறைக்கு சென்று கம்பி எண்ணவேண்டிய வேலையும் அவருக்கு இருக்கிறது. அவர் மணலை கடத்திக் கொண்டு இருக்கிறார். மக்களை ஏமாற்றுகிறார். அ.தி.மு.க.வினர் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு பணம் கொடுத்தால் ஓட்டு போடுவார்கள் என்று நினைக் கிறார்கள். ஆனால், மக்கள் மிகவும் உஷாராக இருக்கின்றனர்.

இவ்வாறுஅவர் பேசினார்.

Next Story