பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எதிரொலி, ரெயில்-பஸ்களில் நிரம்பி வழியும் மக்கள் கூட்டம்


பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எதிரொலி, ரெயில்-பஸ்களில் நிரம்பி வழியும் மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 15 April 2019 10:30 PM GMT (Updated: 15 April 2019 8:22 PM GMT)

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதால், ரெயில் மற்றும் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

திண்டுக்கல்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலோடு, 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது. இதையடுத்து அடுத்த மாதம் (மே) மேலும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு முன்கூட்டியே பொதுத்தேர்வு நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பிற வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடந்து முடிந்தன. இதையடுத்து கடந்த 13-ந்தேதி முதல் பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டது. இதனால் விடுமுறையை கொண்டாடுவதற்கு மக்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கும், உறவினர்களின் வீடுகளுக்கும் செல்லத் தொடங்கி உள்ளனர். ஒருசிலர் சுற்றுலா தலங்களுக்கும் சென்ற வண்ணம் உள்ளனர்.

வெளியூர் பயணம் என்றாலே அனைவரும் ரெயில் பயணத்தை தான் விரும்புவார்கள். இதற்காக முன்கூட்டியே பலர் திட்டமிட்டு ரெயில்களில் முன்பதிவு செய்து விட்டனர். அதேநேரம் முன்பதிவு செய்யாதவர்கள், பொதுபெட்டிகளில் பயணித்து வெளியூர்களுக்கு செல்கின்றனர். இதனால் அனைத்து ரெயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதிலும் குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.

மேலும் ரெயில்களில் டிக்கெட் கிடைக்காத நிலையில், கூட்ட நெரிசலாக இருப்பதால் பலர் பஸ்களில் செல்கின்றனர். இதன் காரணமாக திண்டுக்கல்லில் இருந்து தென்மாவட்டங்கள் மற்றும் கோவை, சேலம், திருச்சி, சென்னை உள்ளிட்ட பெரும்பாலான ஊர்களுக்கு செல்லும் பஸ்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதை தவிர்க்க கோடை விடுமுறையில் கூடுதல் பஸ்கள், ரெயில்களை இயக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. 

Next Story