புதுக்கோட்டையில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் வாக்கு சேகரிப்பு


புதுக்கோட்டையில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 15 April 2019 11:00 PM GMT (Updated: 15 April 2019 8:25 PM GMT)

புதுக்கோட்டை பகுதியில் நேற்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசர் வாக்கு சேகரித்தார்.

புதுக்கோட்டை,

தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசர் நேற்று இரவு புதுக்கோட்டை நகரின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் திருவப்பூரில் தொடங்கி, கோவில்பட்டி, திருக்கோகர்ணம், மறவப்பட்டி, காமராஜபுரம், போஸ்நகர், காந்திநகர், உசிலங்குளம், சின்னப்பா நகர், டி.வி.எஸ். கார்னர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவருடன் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்றனர். அப்போது அவர் பேசுகையில், ரூ.100, ரூ.200-க்காக ஓட்டை விற்காதீர்கள். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடவில்லை. தே.மு.தி.க. வேட்பாளர் வெளியூர்க்காரர். தினகரன் கட்சி வேட்பாளர் சுயேச்சை. அரசியல் கட்சியாக பதிவு செய்யவில்லை என்பதால், தேர்தல் ஆணையத்தில் சட்டியோ, பெட்டியோ கொடுத்திருக்கிறார்கள். அது சுயேச்சை சின்னம். சுயேச்சையாக 39 தொகுதிகளில் போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா?. சுயேச்சையாக போட்டியிட்டு பிரதமரை தேர்ந்தேடுக்கிறேன் என்று தனியாக கட்சியை ஆரம்பித்து பேசுகிறார்.

எல்லோரும் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா கிடையாது. ஜெயலலிதா இறந்த பின்னர் ஐந்தாறு பேர், ஐந்தாறு கட்சியை ஆரம்பித்தார்கள். மாமன் ஒரு கட்சி, மச்சான் ஒரு கட்சி, அக்கா கட்சி, சின்னம்மா கட்சி, பெரியம்மா கட்சி. சின்னம்மா ஜெயிலில் இருக்கிறார். நான் பேசக்கூடாது என்று நினைத்தால், என்னை பேச வைக்கிறார்கள்.

டி.டி.வி. தினகரன் இங்கே வந்து பேசிவிட்டு போனார் என்று சொன்னார்கள். பாவம் ஒரு கட்சி ஆரம்பித்தார், பேசிவிட்டு போகிறார். ஆனால் என்னை சீண்டினீர்கள் என்றால்?, ஜெயலலிதாவிடம் தொடங்கி எனக்கு பல விஷயங்கள் தெரியும். என்னை சீண்டாதீர்கள். நான் பேச ஆரம்பித்தால்? உங்கள் எல்லோரையும் நன்றாக தெரியும். ஒரு கட்சி ஆரம்பித்து, ஓட்டு கேட்கிறீர்களா?, எதையோ செய்யுங்கள். நம்மள ‘டச்’ பண்ணக்கூடாது. நாங்கள் பெரிய கூட்டணி. நாங்கள் வலுவான, பலமான கூட்டணி.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story