முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவு தாருங்கள் கமல்ஹாசன் பேச்சு


முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவு தாருங்கள் கமல்ஹாசன் பேச்சு
x
தினத்தந்தி 15 April 2019 11:15 PM GMT (Updated: 15 April 2019 8:42 PM GMT)

முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவு தாருங்கள் என கரூர் பிரசாரத்தில் கமல்ஹாசன் பேசினார்.

கரூர்,

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கரூர் தொகுதியில் டாக்டர் ஹரிகரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கரூர் மனோகரா கார்னரில் நேற்று பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மக்கள் நீதி மய்யம் நாடு தழுவிய கட்சியாக மாறுவதற்கான சாயல்கள் கரூரில் தெரிகிறது. கரூர் முன்னோடியாக இருந்து தமிழகத்தை வழிநடத்த வேண்டும். நேர்மையான மற்றும் மாற்று அரசியலை முன்னிலைப்படுத்தி செல்ல துணிச்சலுடன் இருப்பது கரூர் மாவட்டம் தான்.

அநீதிக்கு எதிராக, ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து தொண்டை வற்றினாலும், இவர்கள் (மற்ற கட்சி அரசியல்வாதிகள்) கட்டி வைத்திருக்கும் மனக்கோட்டைகள் இடியும். அதற்கான செயலை தமிழகம் தொடங்கி விட்டது என்பதற்கான சாயலாகவே இங்கு கூடியிருக்கும் நல்லவர்களை (மக்கள்) பார்க்கிறேன். நல்லவர்கள் எனக்கூறுவது உங்களை காக்கா பிடிக்க அல்ல. மாறாக காசு வாங்காமல் இங்கு கூடியிருக்கிறீர்களே அதற்காக தான்.

நாளைமறுநாள் (வியாழக் கிழமை) புது விவசாயத்திற்கான விதையை நட வேண்டும். இது பிரதமர் யார்? என்பதை முடிவு செய்யும் தேர்தல் மட்டும் அல்ல. மாறாக நாம் பெற வேண்டியவற்றை நாடாளுமன்றத்தில் எடுத்து சொல்வதற்கான ஒரு வாய்ப்பாக கருத வேண்டும். அங்கேபோய் தலையாட்டி பொம்மைகளாய் நின்று விட்டு, திரும்பி வந்து இந்தியில் ஏதோ சொன்னார்கள் புரியவில்லையே என சொல்வது கிடையாது.

தேசம் முன்னேற வேண்டும் என்றால் மாநிலங்கள், மாவட்டங்கள் சுயாட்சியாக இயங்க வேண்டும். சர்வாதிகாரத்தை இந்தியா என்றுமே ஏற்காது. ஓர் உதாரணமாக இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் திகழ வேண்டும். எனவே நேர்மையானவர்களுக்கு வாக்களியுங்கள். மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவு தாருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரசாரத்தில் ஏராளமான பெண்கள், நடிகர் கமல்ஹாசன் முகமூடி அணிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story