கை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு வசந்தகுமார் வீதி வீதியாக தீவிர பிரசாரம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு


கை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு வசந்தகுமார் வீதி வீதியாக தீவிர பிரசாரம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 15 April 2019 11:00 PM GMT (Updated: 15 April 2019 9:07 PM GMT)

கை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு எச்.வசந்தகுமார் வீதி, வீதியாக தீவிர பிரசாரம் செய்தார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நாகர்கோவில்,

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. குமரி மாவட்டம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அவருடன் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் சென்று ஆதரவாக பிரசாரம் செய்கிறார்கள்.

இதே போல நேற்று முளகுமூடு சந்திப்பு, வயக்கரை, கோடியூர், கோழிப்போர்விளை, பெரம்பி, பாறைக்கடை, குழிக்கோடு, வெள்ளிக்கோடு, கூட்டமாவு, கல்லுவிளை, சடையங்கால், சேரிக்கடை, ஆலத்துரை, மருதூர்குறிச்சி, உண்ணாமலைக்கடை, வாழ்வச்சகோஷ்டம், திருவிதாங்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் செய்தார். மேலும் பல இடங்களில் வீதி வீதியாக சென்றும் மக்களை சந்தித்து கை சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தார்.

அவருடன் காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., பிரின்ஸ் எம்.எல்.ஏ., தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் மனோதங்கராஜ் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் சென்று கை சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தனர். தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற எச்.வசந்தகுமாருக்கு பல்வேறு இடங்களில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலைகள் அணிவித்தும், மலர் தூவியும் வரவேற்றனர்.

முன்னதாக எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. பிரசாரத்தின் போது பேசுகையில், “தோவாளையில் செண்ட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார். ஆனால் தோவாளையில் செண்ட் தொழிற்சாலை கட்ட தேவையான இடத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பே அரசு ஒதுக்கி விட்டது. ஆனால் இவ்வளவு நாட்கள் ஆட்சியில் இருந்தபோது அதற்காக எதுவும் செய்யவில்லை. இப்போது தேர்தல் வந்ததும் செண்ட் தொழிற்சாலை பற்றி பேசுகிறார். நிலம் ஒதுக்கப்பட்ட விஷயம் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தெரியுமா? என்றே தெரியவில்லை. எனவே இந்த ஆட்சியை அகற்ற கை சின்னத்துக்கு வாக்குகளை தாருங்கள்” என்றார்.

பிரசாரத்தின் போது இசைக்குழுவினரும் உடன் சென்றனர். அவர்கள் காங்கிரஸ் கட்சி பற்றியும், எச்.வசந்தகுமார் பற்றியும் பாடல்களை பாடினார்கள்.

மேலும் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக த.மு.மு.க. மாநில கொள்கை பரப்பு செயலாளர் கோவை செய்யது நேற்று குளச்சல் காமராஜர் பஸ் நிலையம், அண்ணாசிலை சந்திப்பு ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார்.

Next Story