அரசியல் கட்சியினர் இன்று மாலைக்குள் தேர்தல் பிரசாரங்களை முடித்துக்கொள்ள வேண்டும் - கலெக்டர் உத்தரவு


அரசியல் கட்சியினர் இன்று மாலைக்குள் தேர்தல் பிரசாரங்களை முடித்துக்கொள்ள வேண்டும் - கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 15 April 2019 10:30 PM GMT (Updated: 15 April 2019 9:28 PM GMT)

அரசியல் கட்சியினர் இன்று மாலைக்குள் தேர்தல் பிரசாரங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:–

நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கடந்த மார்ச் மாதம் 10–ந்தேதியில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட உடன் சுயேச்சை மற்றும் அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள், மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள், பொதுமக்களுக்கு வழங்கப்படும் துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் வெளியிடப்படும் விளம்பரங்கள் என அனைத்துக்கும் முறையான முன் அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி, அனைத்து சுயேச்சை மற்றும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மேற்குறிப்பிட்ட இனங்களுக்கு தங்களுக்கான முறையான அனுமதியை பெற்றிருந்தனர்.

நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 213 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எனவே சுயேச்சை மற்றும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் தாங்கள் மேற்கொண்டுள்ள அனைத்து வகை பிரசாரங்களையும் முடித்துக்கொள்ள வேண்டும்.

மேலும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதோ, வீடு, வீடாக சென்று பிரசாரங்கள் மேற்கொள்வதோ, காட்சி ஊடகங்களில் விளம்பரங்கள் செய்வதோ தேர்தல் விதிமுறைக்கு எதிரானதாக கருதப்படும். இசைக்கச்சேரி, நாடகங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு, கேளிக்கைகள் மூலம் பொது மக்களை கவர்ந்திழுப்பதை நிறுத்தி வைக்க வேண்டும்.

தேர்தல் தொடர்பான பணிகள் மேற்கொண்டு வரும் கட்சி வேட்பாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்த பணியாளர்கள், வெளி மாவட்டம், மாநிலத்தவர்களாக இருப்பின் அவர்கள் இன்று மாலை 6 மணிக்குள் மாவட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும். திருமண மண்டபங்கள், தனியார் விடுதிகள், சமுதாய கூடங்கள், கேளிக்கை விடுதிகள் ஆகிய இடங்களில் வெளி மாவட்டம், மாநிலத்தவர்கள் சந்தேகப்படும் வகையில் தங்கி இருப்பின் அவர்கள் அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளனர்.

நாடாளுமன்ற தொகுதியின் எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு மாவட்டத்திற்கு உள்ளே வரும் வாகனங்களும், வெளிசெல்லும் வாகனங்களும் முழு கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட உள்ளது. வாகனங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வகையான அனுமதிகளும் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகின்றது.

எனவே சுயேச்சை, அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்களது பயன்பாட்டிற்காக ஒரு வாகனம், தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்காக ஒரு வாகனம் மற்றும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கான அவரது பணியாளர்கள், கட்சி பணியாளர்களின் பயன்பாட்டிற்காக மற்றொரு வாகனம் என 3 வாகனங்களுக்கு மீண்டும் அனுமதி பெற அறிவுறுத்தப்படுகின்றது. மேலும் வாக்காளர்களை வாக்களிப்பதற்காக தனிப்பட்ட சுயேச்சை மற்றும் அரசியல் கட்சி வேட்பாளர்களின் மூலம் நியமித்து அழைத்து வருவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும்.

விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிக்க அலுவலர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி, 2 ஆண்டுகள் சிறைதண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படும்.

இவ்வாறு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.


Next Story