குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டுவதற்கு வெடி வைத்ததால் வீடுகளில் விரிசல்


குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டுவதற்கு வெடி வைத்ததால் வீடுகளில் விரிசல்
x
தினத்தந்தி 15 April 2019 10:15 PM GMT (Updated: 15 April 2019 9:28 PM GMT)

ஈரோட்டில் குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டுவதற்கு வெடி வைத்ததால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.

ஈரோடு,

ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு சுகாதாரமான குடிநீரை வினியோகம் செய்வதற்காக ஊராட்சிக்கோட்டையில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட உள்ளது. இந்த கூட்டு குடிநீர் திட்டத்துக்கான பணிகளை செயல்படுத்த பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு ஆர்.என்.புதூர் பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக ஆழமான குழிகள் பொக்லைன் எந்திரம் மூலமாக தோண்டப்படுகிறது. பின்னர் கிரேன் உதவியுடன் பெரிய குழாய்கள் பதிக்கப்பட்டு குழிகள் மூடப்படுகின்றன.

அங்கு பாறைகளாக இருப்பதால் வெடி வைத்து குழி தோண்டப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஒரு சில வீடுகளின் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:–

ஆர்.என்.புதூர் பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டப்படுகிறது. பாறைகளாக இருப்பதால் வெடி வைத்து குழியை தோண்டுகின்றனர். இதனால் வீடுகளின் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தோம். அவர்கள் வந்து பார்வையிட்டு உரிய இழப்பீடு கொடுப்பதாக தெரிவித்து சென்றார்கள். ஆனால் இதுவரை எந்தவொரு இழப்பீடும் தரவில்லை. மேலும், இழப்பீடு என்கிற பெயரில் மிகவும் குறைந்த பணத்தை தருவதாகவும் தெரிவித்து இருக்கின்றனர்.

எனவே குழியை தோண்ட வெடியை பயன்படுத்துவதற்கு பதிலாக கற்களை உடைக்கும் எந்திரத்தை பயன்படுத்தி குழியை தோண்ட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story