சிவகங்கை, ராமநாதபுரத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொழிலாளர் உதவி ஆணையாளர் தகவல்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி சிவகங்கை, ராமநாதபுரத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறைதொடங்கப்பட்டுள்ளது என்று தொழிலாளர் உதவி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச்செல்வி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–
1981–ம் வருட மாற்று முறை ஆவணங்கள் சட்டம் மற்றும் 1951–ம் வருட மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் நாளன்று பொது விடுமுறை அளிக்கப்படவேண்டும். எனவே 2019–ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளான 18–ந் தேதி அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்று வாக்களிப்பதற்கு வசதியாக தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் தொழிலாளர்துறை தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட உள்ளது. தொழிலாளர்கள் தேர்தலில் வாக்களிக்கும் பொருட்டு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து தங்களது புகார்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தொலைபேசி வாயிலாக தெரிவிக்கலாம். புகார் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சிவகங்கை மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு 0457–5240521, 9865254003 7010100899 என்ற எண்ணிலும், ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் கட்டுபாட்டு அலுவலகத்திற்கு 0456–7221833, 9944733736 என்ற எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.