அவினாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு


அவினாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 15 April 2019 10:23 PM GMT (Updated: 15 April 2019 10:23 PM GMT)

அவினாசி அருகே தொழிலாளியின் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ளனர்.

அவினாசி,

திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் கருவலூர் காளிபாளையத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 61). இவர் அனுப்பர்பாளையத்தில் உள்ள பாத்திர பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 11–ந்தேதி தனது மனைவி சுபாராணியுடன் மயிலாடுதுறையில் உள்ள தனது உறவினர் வீட்டு விழாவிற்கு சென்றுவிட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறை ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தட்சிணாமூர்த்தி அவினாசி போலீசில் அளித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் திருட வந்த மர்ம ஆசாமிகள் வீட்டின் பூஜையறை சுவரில் இந்தியில் ஏதோ எழுதி விட்டு சென்றதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். துணை போலீஸ் சூப்பிரண்டு பரமசாமி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சம்பங்கி தலைமையில் தனிப்படை அமைத்து சப்–இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் ஹரிகிருஷ்ணன், விஜய் கொண்ட குழுவினர் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கடந்த 2018–ம் ஆண்டு தட்சிணாமூர்த்தி வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 26 பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரம் திருட்டுப்போனது. இதுகுறித்து அப்போது தட்சிணாமூர்த்தி அவினாசி போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார். ஒரு வருடத்தில தட்சிணாமூர்த்தியின் வீட்டில் 2 முறை நடந்த திருட்டு சம்பவம் நடந்திருப்பது கருவலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story