பி.ஏ.பி. விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான ஆனைமலையாறு, நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும் - அ.தி.மு.க. வேட்பாளர் மகேந்திரன் உறுதி


பி.ஏ.பி. விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான ஆனைமலையாறு, நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும் - அ.தி.மு.க. வேட்பாளர் மகேந்திரன் உறுதி
x
தினத்தந்தி 15 April 2019 10:15 PM GMT (Updated: 15 April 2019 10:51 PM GMT)

பி.ஏ.பி. விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான ஆனைமலையாறு- நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும் என்று அ.தி.மு.க. வேட்பாளர் மகேந்திரன் கூறினார்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மகேந்திரன் பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பொதுமக்கள், வியாபாரிகளிடம் தேர்தல் வாக்குறுதி துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். பிரசாரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் மகேந்திரன் பேசும் போது கூறியதாவது:- கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட எனக்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாய்ப்பு கொடுத்தார். அப்போது நான் தேர்தல் பிரசாரத்தில் கூறிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிை-வேற்றி உள்ளேன்.

தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்- அமைச்சர் ஆகியோர் என்னை மீண்டும் பொள்ளாச்சி தொகுதியில் நிறுத்தி உள்ளனர். பொள்ளாச்சி தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி- போத்தனூர் ரெயில் பாதை பணிகள் நிதி பற்றாக்குறையால் கிடப்பில் கிடந்தன.

மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நிதியை பெற்று கிடப்பில் கிடந்த அகலரெயில் பாதை பணிகள் வேகப்படுத்தப்பட்டு நிறைவு பெற்று உள்ளது. பொள்ளாச்சி மக்கள், வியாபாரிகளின் கோரிக்கை ஏற்று பொள்ளாச்சியில் இருந்து கோவை வழியாக சென்னைக்கும், பொள்ளாச்சியில் இருந்து தென்மாவட்டங்களுக்கும் இரவு நேர ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பொள்ளாச்சி- திண்டுக்கல் இடையே அதிவிரைவு நான்கு வழிச்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. என்னை மீண்டும் வெற்றி பெற செய்தால் தற்போது உயர்த்தப்பட்ட விலையை விட கூடுதலாக கொப்பரை தேங்காய்க்கு விலை பெற்றுக் கொடுக்கப்படும். பி.ஏ.பி. விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும். பொள்ளாச்சி தொகுதியில் பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வருவதற்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story