வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை ரத்து செய்தது ஜனநாயக படுகொலை மு.க.ஸ்டாலின் பேட்டி


வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை ரத்து செய்தது ஜனநாயக படுகொலை மு.க.ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 16 April 2019 11:15 PM GMT (Updated: 16 April 2019 7:03 PM GMT)

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை ரத்து செய்தது ஜனநாயக படுகொலை என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திருச்சி,

திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை முடித்த பின் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை செல்வதற்காக கார் மூலம் நேற்று இரவு திருச்சி விமான நிலையம் வந்தார். வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் பதில் அளிக்கையில், “எந்தெந்த தொகுதிகளில் ரூ.2 ஆயிரம், ரூ.500 கொடுத்துள்ளார்கள் என உங்களுக்கு (ஊடகம்) தெரியும். ஆனால் அதனை நீங்கள் வெளியில் சொல்வதில்லை. அது உங்கள் ஜனநாயகம். பரவாயில்லை. ஆனால் ஜனநாயக படுகொலை நடத்திருக்கிறது” என்றார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேனியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் போட்டியிடுகிறார். அங்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக ஆதாரத்தோடு வீடியோ வெளியில் வந்திருக்கிறது. இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அமைச்சர் வேலுமணியின் பினாமியான பெரிய கான்டிராக்டரானவரின் வீட்டில் பெரிய சோதனை நடந்துள்ளது. அந்த சோதனையை பற்றி எதுவும் வரவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு தி.மு.க. மீது களங்கம் சொல்வதற்காக பிரதமர் மோடி தேர்தல் ஆணையத்தை பயன்படுத்துகிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது. தற்போது கூட(அதாவது நேற்று இரவு) தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வீட்டில் சோதனை நடந்து கொண்டிருக்கிறது. யார் கொடுத்த புகார் என்று தெரியவில்லை. தமிழிசை சவுந்தரராஜன் வீட்டில் கோடி கோடியாக பணம் வைத்துள்ளனர். ஏன்? அங்கு சோதனை நடத்துவதில்லை. இது தான் என்னுடைய கேள்வி.

அமலாக்க துறை, வருமான வரித்துறை, நீதிமன்றம், சி.பி.ஐ., அடுத்ததாக தேர்தல் ஆணையம் இவற்றையெல்லாம் மோடி கூட்டு வைத்துக்கொண்டு எப்படியாவது இந்த தேர்தலை முடக்கனும் என திட்டமிட்டிருக்கிறார். அ.தி.மு.க.வினரின் தோல்வி பயத்தினால் தான் தி.மு.க.வினரின் வீடுகளில் சோதனை நடைபெறுகிறது.

கரூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மீது அ.தி.மு.க.வினர் தாக்குதல் நடத்தியது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையத்தை வரக்கூடிய காலங்களில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதே எனது கோரிக்கை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story