அ.தி.மு.க., த.மா.கா. வெற்றியை தடுக்க சதி ஜி.கே.வாசன் பரபரப்பு பேச்சு


அ.தி.மு.க., த.மா.கா. வெற்றியை தடுக்க சதி ஜி.கே.வாசன் பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 16 April 2019 11:00 PM GMT (Updated: 16 April 2019 7:40 PM GMT)

அ.தி.மு.க., த.மா.கா.வின் வெற்றியை தடுக்க சதி என்று தஞ்சையில் ஜி.கே.வாசன் பரபரப்பாக பேசினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.நடராஜன், சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் காந்தியை ஆதரித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தஞ்சை பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகில் இருந்து நேற்று பிரசாரத்தை தொடங்கினார்.

அவர், தஞ்சை நகரில் பல்வேறு இடங்களுக்கு திறந்த வேனில் சென்று ஆதரவு திரட்டினார். பின்னர் தஞ்சை ரெயிலடியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியில் இந்தியா வளர்ச்சி, முன்னேற்றம் அடைந்த நாடாக திகழ்கிறது. பாதுகாப்பான நாடாக உருவாக்குவோம் என்ற நம்பிக்கையை நரேந்திரமோடி தந்து இருக்கிறார். அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, மக்கள் நம்பிக்கையை பெற்றுள்ளது. மக்கள் விரும்பக்கூடிய கூட்டணி அ.தி.மு.க. கூட்டணி. மக்கள் விரோத போக்கை கையாளக்கூடியது தி.மு.க. கூட்டணி. நம்ம கூட்டணி உறுதியாக வெற்றி பெறக்கூடியது. தி.மு.க. கூட்டணி உறுதியாக தோற்கக்கூடியது. நாம் எதார்த்தமான கூட்டணி. அவர்கள் சந்தர்ப்பவாத கூட்டணி.

தஞ்சை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டவர் ஜெயலலிதா. பா.ஜ.க. ஆட்சியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தை அ.தி.மு.க. கொண்டு வந்துள்ளது. சென்னை, கோவை, மதுரையை போல் வளர்ச்சி பெற்ற மாநகராட்சியாக தஞ்சை திகழும். தஞ்சை மாநகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம், புதிய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் என புதிய திட்டங்களை கொண்டு வந்து மிக சிறந்த வளர்ச்சியை பெற வேண்டும் என அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.

அ.தி.மு.க. ஆட்சி சிறப்பாக நடைபெறும்போது ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் வளர்ச்சியை பெற்றுள்ளது. தி.மு.க. ஆட்சி காலத்தில் ஸ்தம்பிக்கும் நிலை தான் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டத்தை கொடுத்து, மக்களின் எண்ணத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பிரதிபலித்து கொண்டு இருக்கின்றனர். இந்த ஆட்சியில் விவசாயிகள், மீனவர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் உயர்வை பெற்றுள்ளனர்.

முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது பெண்களுக்கு அதிக திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். மத்தியில் ஆட்சி தொடர இருக்கிறது. மாநிலத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டத்தை 100 சதவீதம் பெற இருக்கிறோம். ஒத்த கருத்துடைய கட்சிகள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்யும்போது மாநிலத்திற்கு தேவையான நிலுவை திட்டங்களை பெற முடியும். அதற்கான சந்தர்ப்பம் தான் இந்த தேர்தல்.

மாநிலத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறக்கூடிய முதன்மை வேட்பாளர்களாக அ.தி.மு.க., த.மா.கா. வேட்பாளர்கள் உள்ளனர். இதை தடுக்க சதி நடக்கிறது. அந்த சதியை முறியடிக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். 2 நாட்கள் கண்துஞ்சாமல் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. பேசும்போது, ஒரு நாடு சிறந்த நாடாக வளர நிலையான ஆட்சி தேவை. குழப்பமான கூட்டணியான தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியால் எப்படி நிலையான ஆட்சியை தர முடியும்?. நிலையான ஆட்சி அமைய த.மா.கா. வேட்பாளருக்கு ஆதரவு தர வேண்டும். நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இன்னும் 100 ஆண்டுகளுக்கு அ.தி.மு.க. இருக்கும் என சட்டசபையில் ஜெயலலிதா பேசினார்.

ஜெயலலிதாவின் சொல்படி ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. அ.தி.மு.க. இன்னும் 100 ஆண்டுகள் இருக்க இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். தஞ்சை மக்கள் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் பிற மாவட்டங்களை விட தஞ்சை மாவட்டம் நல்ல வளர்ச்சியை பெற்றது என்பதை எண்ணி பார்க்க வேண்டும். காவிரி பாலைவனமாக மாறாமல் இருக்க காவிரி-கோதாவரி திட்டத்தை நிறைவேற்றுவதாக பிரதமர் மோடியும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் உறுதி அளித்துள்ளனர் என்றார்.

முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சுரேஷ் மூப்பனார், பி.எல்.ஏ.சிதம்பரம் மற்றும் அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் சரவணன், புண்ணியமூர்த்தி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story