தேர்தல் விதிமீறல் தொடர்பாக 104 வழக்குகள் பதிவு போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் பேட்டி


தேர்தல் விதிமீறல் தொடர்பாக 104 வழக்குகள் பதிவு போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் பேட்டி
x
தினத்தந்தி 16 April 2019 9:30 PM GMT (Updated: 16 April 2019 7:50 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 104 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் தெரிவித்தார்.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 104 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் தெரிவித்தார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

104 வழக்குகள்

நெல்லை மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 104 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பறக்கும் படையினர் சார்பில் 57 புகார்களும், வீடியோ கண்காணிப்பு குழுவினர் சார்பில் 2 புகார்களும், போலீசார் சார்பில் 26 புகார்களும், கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர்கள் சார்பில் 11 புகார்களும், உதவி வாக்கு பதிவு அலுவலர் ஒரு புகாரின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதில் அ.தி.மு.க. மீது 42 வழக்குகளும், தி.மு.க. மீது 26 வழக்குகளும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மீது 17 வழக்குகளும், நாம் தமிழர் கட்சி மீது ஒரு வழக்கும், மற்ற கட்சிகள் மீது 18 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு 508 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அந்த அனுமதி முடிவடைந்து விட்டது. தேர்தல் அன்று வேட்பாளர்கள், முகவர்கள் செல்ல வாகன அனுமதி பெறவேண்டும்.

துணை ராணுவம்

மாவட்டத்தில் 5 ஆயிரத்து 43 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். துணை ராணுவம், மாநகரத்திற்கு வந்து உள்ளது. மாவட்ட பகுதிக்கு ரெயில்வே பாதுகாப்பு படை 6 கம்பெனி பாதுகாப்பு பணிக்கு வந்து உள்ளது. மாவட்டத்தில் உள்ள 327 பதற்றமான வாக்கு சாவடிகளுக்கும் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.

வாக்கு சாவடியில் இருந்து 200 மீட்டர் தான் அரசியல் கட்சியினர் பூத் அமைத்து கொள்ளலாம். அதில் 2 பேர் மட்டுமே இருக்கவேண்டும். அவர்கள் குற்றப்பின்னணி இல்லாதவர்களாக இருக்கவேண்டும். அந்த பூத்தில் ஒரு பேனர் வைத்து கொள்ளலாம். அதில் வேட்பாளர் பெயர், சின்னம் மட்டும் இடம் பெறவேண்டும். போட்டோ இடம்பெறக்கூடாது. உணவு பரிமாறக்கூடாது. 200 மீட்டருக்கு அப்பால் தான் வாகனங்களை நிறுத்தவேண்டும். மாற்றுத்திறனாளிகள் மட்டும் வாக்கு சாவடி அருகில் வரலாம். 100 மீட்டருக்கு அப்பால் தான் வேட்பாளர், முகவர்கள் வாகனங்களை நிறுத்தவேண்டும். வாக்குசாவடிக்கு செல்போன் எடுத்து செல்லக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story