தஞ்சை மாவட்டத்தில் துணை ராணுவத்தினர் உள்பட 3,876 பேருக்கு தேர்தல் பணி ஒதுக்கீடு


தஞ்சை மாவட்டத்தில் துணை ராணுவத்தினர் உள்பட 3,876 பேருக்கு தேர்தல் பணி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 16 April 2019 10:45 PM GMT (Updated: 16 April 2019 7:51 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் துணை ராணுவத்தினர் உள்பட 3,876 பேருக்கு தேர்தல் பணி ஒதுக்கீடு போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் தலைமையில் நடந்தது.

தஞ்சாவூர்,

தஞ்சை நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில் பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய தொகுதிகள் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்டவை.

தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவையாறு மற்றும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆகிய 6 தொகுதிகள் தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டவையாகும். தஞ்சை மாவட்டத்தில் 2,290 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நாளில் 11,781 அலுவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். அதில் 2,746 பேர் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களாகவும், 8,341 பேர் 1,2,3 மற்றும் 4-ம் நிலை வாக்குப்பதிவு அலுவலர்களாகவும் பணியாற்ற உள்ளனர்.

தஞ்சை சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள 289 வாக்குச்சாவடிகளில் கூடுதலாக 694 அலுவலர்கள் 5 மற்றும் 6-ம் நிலை வாக்குப்பதிவு அலுவலர்களாக பணியாற்ற உள்ளனர். தேர்தல் எந்தவித பிரச்சினையும் இன்றி அமைதியாக நடைபெற வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியிலும், வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு சென்று, வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லும் பணியிலும் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இவர்களுடன் துணை ராணுவத்தினரும், முன்னாள் ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்படுகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் 2,062 போலீசாரும், 1,334 முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற போலீசாரும், ஊர்க்காவல் படையினரும், 480 துணை ராணுவத்தினரும் என மொத்தம் 3,876 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. அங்கு துணை ராணுவத்தினர், போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளவர்கள் ஏற்கனவே கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எந்தந்த வாக்குச்சாவடிகளில் ஈடுபட வேண்டும் என பணி ஒதுக்கீடு வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது. தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் முன்னிலையில் இந்த பணி நடைபெற்றது. இவர்கள் அனைவரும் இன்று(புதன்கிழமை) காலை முதல் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்வார்கள். மேலும் ரோந்து பணியிலும் ஈடுபடுத்தப்படுவார்கள்.

Next Story