சிறுமிக்கு பாலியல் தொல்லை, முதியவருக்கு ஆயுள் தண்டனை - தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தேனி,
தேனி பழைய அரசு மருத்துவமனை சாலையை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 62). இவர், கடந்த 2017-ம் ஆண்டு, தெருவில் விளையாடிய 7 வயது சிறுமியை மிட்டாய் வாங்கிக் கொடுப்பதாக கூறி தனது வீட்டுக்குள் அழைத்து சென்றார். அங்கு அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
இதை அந்த சிறுமி, தனது தாயாரிடம் தெரிவித்தார். இதை அறிந்த சிறுமியின் தாயார் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லத்துரையை கைது செய்தனர். இந்த வழக்கு, தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் போலீஸ் துறை சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் ராஜராஜேஸ்வரி ஆஜராகி வாதாடினார்.
இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த செல்லத்துரைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து மாவட்ட மகளிர் கோர்ட்டு நீதிபதி திலகம் உத்தரவிட்டார். இதையடுத்து செல்லத்துரையை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story