உப்புக்கோட்டை பகுதியில் தக்காளி விலை உயர்வு


உப்புக்கோட்டை பகுதியில் தக்காளி விலை உயர்வு
x
தினத்தந்தி 16 April 2019 10:30 PM GMT (Updated: 16 April 2019 7:53 PM GMT)

உப்புக்கோட்டை பகுதியில் தக்காளி விலை உயர்ந்துள்ளது.

உப்புக்கோட்டை,

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான கூழையனூர், குச்சனூர், பாலார்பட்டி, குண்டல் நாயக்கன்பட்டி, உப்புக்கோட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் முட்டைக்கோஸ், பீட்ரூட், தக்காளி முள்ளங்கி, கத்தரிக்காய், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

வருடத்தின் அனைத்து பருவத்திலும் இங்கு காய்கறிகள் கிடைப்பது சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது. முல்லைப்பெரியாற்று பாசனம் மூலம் விளையும் இந்த காய்கறிகள் திரட்சியாகவும், சுவையாகவும் இருப்பதால் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் வரவேற்பு உள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கில் கடைமடை பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி நடந்து வருகிறது. தற்போது தக்காளி அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பின்னர் அவை தரம் பிரிக்கப்பட்டு பிளாஸ்டிக் பெட்டிகளில் வைக்கப்பட்டு சந்தைகள், மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

நோய் தாக்குதல் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாததால் தக்காளி விளைச்சல் அமோகமாக உள்ளது. அதேநேரத்தில் விலையும் அதிகரித்துள்ளது.

கடந்த வாரத்தில், 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது விலை உயர்ந்து ரூ.450-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story