‘ஓம் சக்தி, மகா சக்தி’ கோஷம் முழங்க சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம்


‘ஓம் சக்தி, மகா சக்தி’ கோஷம் முழங்க சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 16 April 2019 10:30 PM GMT (Updated: 16 April 2019 8:11 PM GMT)

சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ‘ஓம் சக்தி, மகா சக்தி’ என்ற கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சமயபுரம்,

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் பூச்சொரிதல்விழா, சித்திரை தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு அஷ்ட புஜங்களுடன் கூடிய சுயம்பு திருமேனியாக மாரியம்மன் எழுந்தருளியுள்ளார்.

மாயாசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எந்தவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாமல், சகல சவுபாக்கியங்களும் கிடைக்க அம்மனே 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது ஐதீகம். ஆண்டுதோறும் மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் முடிவடைந்ததும், சித்திரை தேர்த்திருவிழா நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை தேர்த்திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று காலை அம்மன் பல்லக்கில் எழுந்தருளி ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைந்தார். கடந்த 8-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை காலையில் பல்லக்கிலும், இரவில் பல்வேறு வாகனங்களிலும் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு பல்லக்கில் அம்மன் புறப்பாடாகி வழிநடை உபயங்கள் கண்டருளினார். இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடாகி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தேர்த்திருவிழாவையொட்டி, நால்ரோடு அருகே உள்ள தெப்பக்குளத்தில் குளித்துவிட்டு, அலகு குத்்தியும், அக்னி சட்டி ஏந்தியும், முளைப்பாரி எடுத்தும், குழந்தையை கரும்பு தொட்டிலில் சுமந்து வந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இதன் காரணமாக சமயபுரத்தில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் சமயபுரத்துக்கு வந்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் மஞ்சள் உடை உடுத்தி விரதம் இருந்து பாதயாத்திரையாக சமயபுரம் வந்திருந்தனர். இதனால், சமய புரம் விழாக்கோலம் பூண்டிருந்தது.

தேரோட்டத்தை முன்னிட்டு அம்மனுக்கு நேற்று அதிகாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காலை 10.30 மணிக்கு தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து வாணவேடிக்கைகள் முழங்க, மேளதாளம் ஒலிக்க 11.05 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் கலந்துகொண்டு ‘ஓம் சக்தி, மகாசக்தி’ என்று பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோடும் வீதி வழியாக வலம்வந்து 1.55 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. நேற்று இரவு 9 மணிக்கு அம்மன் தேரிலிருந்து புறப்பாடாகி மூலஸ்தானம் சென்றடைந்தார்.

இன்று (புதன்கிழமை) காலை பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். நாளை (வியாழக்கிழமை) காலை பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு முத்து பல்லக்கிலும் அம்மன் புறப்பாடு நடைபெறுகிறது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

அன்று மதியம் 12 மணிக்கு அம்மன் பல்லக்கில் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைதலும், மாலை 5 மணிக்கு அபிஷேகம், இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில், மேலாளர் ஹரிஹர சுப்ரமணியன், மணியக்காரர் ரமணி மற்றும் கோவில் பணியாளர்கள், ஊழியர்கள் செய்து இருந்தனர்.

Next Story