சரவணமலையில் ஹெலிகாப்டர் மூலம் காட்டுத்தீ அணைப்பு


சரவணமலையில் ஹெலிகாப்டர் மூலம் காட்டுத்தீ அணைப்பு
x
தினத்தந்தி 16 April 2019 10:15 PM GMT (Updated: 16 April 2019 8:33 PM GMT)

குன்னூர் அருகே உள்ள சரவணமலையில் ஏற்பட்ட காட்டுத்தீ ஹெலிகாப்டர் மூலம் அணைக்கப்பட்டது.

குன்னூர்,

குன்னூர்-கோத்தகிரி சாலையில் உள்ள வட்டபாறை என்ற இடத்தில் சரவணமலை உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலப்பரப்பில் காடு உள்ளது. இந்த காட்டில் வரையாடு, காட்டெருமை, சிறுத்தைப்புலி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

தற்போது வறட்சி நிலவி வருவதால் வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத்தீ பிடிக்கிறது. இதனால் பல மரங்கள் செடி, கொடிகள் எரிந்து நாசமாகியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு சரவணமலை வனப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டது. காட்டுத்தீயை சுமார் 3 நாட்களாக போராடி தீயணைப்பு துறையினர் அணைத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் சுமார் 1 மணியளவில் மீண்டும் சரவணமலை வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென பரவியது.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இதையடுத்து தீயை அணைக்க வனத்துறையினர் கோவை சூலூரில் உள்ள விமானப்படை தளத்தை அணுகினர். விமானப்படை அதிகாரிகள் தீயை அணைக்க விமானப்படை ஹெலிகாப்டரை அனுப்பி வைத்தனர்.

பின்னர் ஹெலிகாப்டர் மூலம் ஊட்டியில் உள்ள காமராஜர் அணையில் இருந்து 3 முறை தண்ணீர் எடுத்து வந்து சரவணமலை வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைத்தனர்.

இந்த நிலையில் மீண்டும் தீ பிடிக்காமல் தடுக்க தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறியதாவது:-

கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டுத்தீ ஏற்பட்டது. அதனை 3 நாட்களுக்கு பிறகு அணைக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் மீண்டும் தீ விபத்து ஏற்படாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் தான் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான மரங்கள் மற்றும் செடி, கொடிகள் எரிந்து நாசமாகியுள்ளன. எனவே காட்டுத்தீ ஏற்படாமல் இருக்க வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story