போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தொழிலாளி தர்ணா


போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தொழிலாளி தர்ணா
x
தினத்தந்தி 16 April 2019 10:45 PM GMT (Updated: 16 April 2019 9:39 PM GMT)

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தொழிலாளி தர்ணா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி பிராட்டியூரை சேர்ந்தவர் ராஜ்குமார். தொழிலாளி. இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கும் இடையே சாக்கடை கால்வாய் பிரச்சினையால் முன்விரோதம் உள்ளது. அதன் காரணமாக நேற்று முன்தினம் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக புகார் கொடுப்பதற்காக திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையத்துக்கு சென்ற ராஜ்குமாரை, அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர் செல்போனில் படம் பிடித்து மிரட்டியதாக தெரிகிறது. இதுபற்றி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுப்பதற்காக ராஜ்குமார் தனது குடும்பத்துடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார்.

ஆனால் அவர்களை அலுவலகத்துக்குள் நுழைய விடாமல் அங்கிருந்த போலீசார் தடுத்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த ராஜ்குமார் தனது குடும்பத்துடன் கமிஷனர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்கள், ‘பாதிக்கப்பட்டது நாங்கள். ஆனால் போலீசார் எதிர்தரப்பினருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள்’ என்று குற்றஞ்சாட்டினர்.

இதுபற்றி தகவல் அறிந்த கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயஅன்பரசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர், திருச்சி கண்டோன்மெண்டில் உள்ள உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று புகார் கொடுக்க அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story