என்னை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்தால், அரூர் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு என்றும் கடமைபட்டவனாக இருப்பேன் - அ.தி.மு.க. வேட்பாளர் வி.சம்பத்குமார் பிரசாரம்


என்னை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்தால், அரூர் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு என்றும் கடமைபட்டவனாக இருப்பேன் - அ.தி.மு.க. வேட்பாளர் வி.சம்பத்குமார் பிரசாரம்
x
தினத்தந்தி 16 April 2019 10:45 PM GMT (Updated: 16 April 2019 11:02 PM GMT)

என்னை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்தால் அரூர் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு என்றும் கடமைபட்டவனாக இருப்பேன் என்று அ.தி.மு.க. வேட்பாளர் வி.சம்பத்குமார் பிரசாரம் செய்தார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் அரூர் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வி.சம்பத்குமார் போட்டியிடுகிறார். அவர் பல்வேறு கிராமங்களில் வீதி, வீதியாக சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அ.தி.மு.க. வேட்பாளர் வி.சம்பத்குமாருக்கு ஆதரவாக அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் அமைச்சர் கே.பி.அன்பழகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பஸ் நிலையம் மற்றும் முக்கிய வீதிகளில் திறந்த ஜீப்பில் சென்ற அவர் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தின்போது வேட்பாளர் வி.சம்பத்குமார் பேசியதாவது:-

அ.தி.மு.க.-பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் எந்த திட்டங்களை நிறைவேற்ற முடியுமோ அவற்றை மட்டுமே மக்களுக்கு வாக்குறுதியாக அளித்து உள்ளோம். தேர்தல் அறிக்கையில் நீர்ப்பாசன திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தேர்தல் அறிக்கையில் நிறைவேற்ற முடியாத திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

மக்கள் நல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வரும் மத்திய, மாநில அரசுகளுக்கு இந்த தொகுதி மக்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து ஆதரவை தர வேண்டும். என்னை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்தால் இந்த தொகுதி மக்களுக்கு எப்போதும் கடமைபட்டவனாக இருப்பேன். இந்த தொகுதியின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன். தொகுதியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த வாக்குசேகரிப்பின்போது முன்னாள் எம்.எல்.ஏ. கே.சிங்காரம், மொரப்பூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் மதிவாணன், மாவட்ட வக்கீல் அணி துணை செயலாளர் ஆர்.ஆர்.பசுபதி, கம்பைநல்லூர் நகர செயலாளர் தனபால், கூட்டுறவு சங்க தலைவர்கள் ராமஜெயம், மகாலிங்கம், செல்வம், நிர்வாகி ராஜூ, பா.ம.க. மாவட்ட செயலாளர் இமயவர்மன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மதியழகன், தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் சரவணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். 

Next Story