கொத்தனாரை கொன்ற அக்காள் கணவருக்கு ஆயுள் தண்டனை - விருத்தாசலம் கோர்ட்டில் தீர்ப்பு
கொத்தனாரை கொன்ற அக்காள் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து விருத்தாசலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம் நெய்வேலி கண்ணுத்தோப்பை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 35). கொத்தனார். இவருடைய அக்காள் கணவர் பாலசுப்பிரமணியன் (44). வாசுதேவனின் அண்ணன் ரவி. லாரி டிரைவரான ரவி அடிக்கடி வேலை காரணமாக வெளியூர் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் ரவி வீட்டில் இல்லாத சமயத்தில் பாலசுப்பிரமணியன் அவரது வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இதை அறிந்த வாசுதேவன், பாலசுப்பிரமணியனை ரவி வீட்டிற்கு செல்ல வேண்டாம் என கூறி கண்டித்துள்ளார்.
இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 14-4-2017 அன்று ரவி வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது வீட்டிற்கு பாலசுப்பிரமணியன் சென்றுள்ளார். இதை அறிந்த வாசுதேவன், ரவி வீட்டிற்கு சென்று அவரை தட்டிக்கேட்டார். இதில் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன், கழியால் வாசுதேவனின் தலையில் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த வாசுதேவன் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.இது தொடர்பாக நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு விருத்தாசலம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இவ்வழக்கு விசாரணை அனைத்தும் நிறைவடைந்த நிலையில் நேற்று நீதிபதி இளவரசன் தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட பாலசுப்பிரமணியனுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் அரசு வக்கீல் விஜயகுமார் ஆஜரானார்.
Related Tags :
Next Story