காட்பாடி சட்டமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு


காட்பாடி சட்டமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 17 April 2019 10:45 PM GMT (Updated: 17 April 2019 4:33 PM GMT)

காட்பாடி சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

காட்பாடி, 

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி, தி.மு.க. சார்பில் எஸ்.ஜெகத்ரட்சகன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் என்.ஜி.பார்த்திபன் உள்பட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நடக்கிறது.

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் அடங்கி உள்ள காட்பாடி சட்டமன்ற தொகுதியில் 248 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் எந்திரங்கள் காட்பாடி தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

இன்று வாக்குப்பதிவு நடைபெற இருப்பதை தொடர்ந்து வாக்குப்பதிவு மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் எந்திரங்களை அனுப்பும் பணி நேற்று காலை நடந்தது. காட்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள 24 மண்டலங்களுக்கும் கூடுதலாக 2 செட் எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தினகரன் தலைமையில் அலுவலர்கள், வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பிவைத்தனர். அதோடு டான்பாஸ்கோ பள்ளியில், தேர்தல் பணிக்கு செல்லும் பணியாளர்களுக்கு பணியாணை வழங்கப்பட்டது. அவர்கள் மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்களுடன் புறப்பட்டு சென்றனர். அவர்களுடன் துப்பாக்கி ஏந்திய போலீசார், துணை ராணுவ வீரர்களும் சென்றனர்.

Next Story