1,850 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு


1,850 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 17 April 2019 10:45 PM GMT (Updated: 17 April 2019 6:32 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 1,850 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் ஓசூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மாவட்டத்தில் உள்ள 1,850 வாக்குச்சாவடி மையங்களுக்கு, அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன்படி கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று மதியம் 1 மணிக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட உதவி தேர்தல் அலுவலர் சரவணன் முன்னிலையில் அறையின் சீல் அகற்றப்பட்டு, 307 வாக்குப்பதிவு மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதில் பேலட் யூனிட், கன்ட்ரோல் யூனிட், விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பை, தேர்தல் அலுவலர், துப்பாக்கி ஏந்திய போலீசார் என ஒவ்வொரு வாகனத்திலும் ஏற்றி அனுப்பினர். முன்னதாக வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் பல்வேறு நிலை அலுவலர்களுக்கு கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பணிக்கான ஆணைகள் வழங்கப்பட்டது. இதே போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் இருந்தும் வாகனங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

Next Story