தேர்தல் பிரசார அனுமதி தொடர்பாக கரூர் காங்கிரஸ் வேட்பாளர்- கலெக்டர் பேசிய பரபரப்பு ஆடியோ


தேர்தல் பிரசார அனுமதி தொடர்பாக கரூர் காங்கிரஸ் வேட்பாளர்- கலெக்டர் பேசிய பரபரப்பு ஆடியோ
x
தினத்தந்தி 17 April 2019 11:15 PM GMT (Updated: 17 April 2019 7:26 PM GMT)

தேர்தல் பிரசார அனுமதி தொடர்பாக கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி-கலெக்டர் அன்பழகன் பேசிய பரபரப்பு ஆடியோ வெளியானது.

கரூர்,

கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களின் இறுதிக்கட்ட பிரசாரத்தை 16-ந்தேதி மாலை கரூர் மனோகரா கார்னரில் நிறைவு செய்வது தொடர்பாக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியினரிடையே கடும் போட்டி நிலவியது.

இந்தநிலையில் கடந்த 15-ந்தேதி இரவு 11.45 மணியளவில் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தூண்டுதலின்பேரில் தி.மு.க. வழக்கறிஞர் செந்தில் உள்ளிட்டோர் தனது வீட்டுக்கு (முகாம் அலுவலகம்) வந்து கூச்சலிட்டு தகராறு செய்ததாகவும், தனக்கும், தனது குடும்பத்துக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக நடந்து கொண்டதாகவும், போனில் மிரட்டியதாகவும் நிருபர்களிடம் தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அன்பழகன் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக தாந்தோன்றிமலை போலீஸ் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில், செந்தில்பாலாஜி, ஜோதிமணி, வழக்கறிஞர் செந்தில் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வழக்கறிஞர் செந்தில் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஆகியோர் கலெக்டரிடம் பேசியிருக்கின்றனர். அந்த வகையில் தற்போது ஜோதிமணியும், தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அன்பழகனும் போனில் பேசியபோது பதிவு செய்யப்பட்ட ஆடியோ வாட்ஸ்-அப்பில் வைரலாகி வருகிறது.

அந்த உரையாடலில் ஒரு கட்டத்தில் வேட்பாளர் ஜோதிமணி, “தேர்தலை நிறுத்த முடிவெடுத்தால் அதையும் சந்திக்க தயார். மக்கள் எங்களிடம் உள்ளனர். நீங்கள் தேர்தல் ஆரம்பித்ததிலிருந்து இதுவரைக்கு எந்த பணியையும் நேர்மையாக முடிக்கவில்லை. நீங்கள் அ.தி.மு.க.வின் பலத்துக்கு கீழ் இருக்கிறீர்கள். ஆனால் தேர்தல் ஆணையத்தை நம்புகிறேன். இந்திய தேர்தல் ஆணையம் உங்களை நம்பி தேர்தல் அதிகாரி பதவியை ஒப்படைத்து இருக்கிறது. அதனை தவறாக பயன்படுத்தாதீர்கள். தயவு செய்து கேட்டு கொள்கிறேன் நான். தேர்தலை நிறுத்துகிற அளவுக்கு நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால் என்ன சொல்வது” என்றார்.

அதற்கு கலெக்டர் அன்பழகன், “நீங்கள் இப்படித் தான் சொல்வீர்கள். அதுக்காக நாங்கள் நேர்மையாக இல்லை என்று சொல்ல முடியுமா? நான் ராணுவ வீரரின் மகன். நான் அனைத்தையும் ரெக்கார்டு செய்து விட்டேன். நான் ரத்து செய்ய பரிந்துரை செய்வேன்” என்கிறார்.

தொடர்ந்து ஜோதிமணி, “நீங்கள் பண்ணுங்கள் சார். எங்களுக்கு மக்கள் இருக்கிறார்கள். ஒரு தேர்தல் அதிகாரியின் வாயில் இருந்து இந்த வார்த்தை வரலாமா? 13½ லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். உங்களது உள்நோக்கம் எனக்கு தெரிந்து விட்டது. உண்மை எங்கள் பக்கம் இருக்கிறது” என்கிறார்.

Next Story