நெல் மூட்டைகளில் எடை குறைவால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட சம்பளத்தில் பிடித்தம் செய்யக்கூடாது ஊழியர்கள் வலியுறுத்தல்


நெல் மூட்டைகளில் எடை குறைவால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட சம்பளத்தில் பிடித்தம் செய்யக்கூடாது ஊழியர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 April 2019 10:45 PM GMT (Updated: 17 April 2019 6:52 PM GMT)

நெல் மூட்டைகளில் எடை குறைவால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட சம்பளத்தில் பிடித்தம் செய்யக்கூடாது என கொள்முதல் நிலைய ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டத்தில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 500 எக்டேரில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 47 ஆயிரத்து 441 எக்டேரில் நேரடி நெல் விதைப்பு முறையிலும், 15 ஆயிரத்து 53 எக்டேரில் திருந்திய நெல் சாகுபடி முறையிலும், 7 ஆயிரத்து 869 எக்டேரில் இயல்பான முறையிலும் நெல் சாகுபடி நடைபெற்றது.

சம்பா, தாளடி அறுவடை பருவத்தையொட்டி விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக நாகை மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் 272 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.

கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி நெல் கொள்முதல் தொடங்கியது. இதுவரை 3 லட்சத்து 60 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன.

தற்போது வெயில் சுட்டெரிப்பதால் நெல் மூட்டைகளில் எடை இழப்பு ஏற்படுகிறது. இதை ஈடுகட்ட கொள்முதல் நிலைய ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுவதால் ஊழியர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதுகுறித்து வேதாரண்யம் பகுதியில் உள்ள கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கூறியதாவது:-

நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து ஒரு லாரியில் 320 நெல் மூட்டைகளை எடுத்து செல்வார்கள். இதில் ஒரு லாரிக்கு 350 முதல் 450 கிலோ வரை எடை இழப்பு ஏற்படுவதாகவும், இதன் காரணமாக ஒரு லாரிக்கு ரூ.8 ஆயிரம் வரை இழப்பு ஏற்படுவதாகவும் கூறுகிறார்கள். ஒரு நாளைக்கு 100 லாரிகளில் நெல் மூட்டைகளை கொண்டு சென்றால் ரூ.8 லட்சம் வரை இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்புக்கு அந்தந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் பருவ கால எழுத்தர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.

இழப்பை ஈடுகட்ட ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்வதும் நடக்கிறது. கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாக்க கொட்டகை வசதி ஏற்படுத்தினால் இந்த பிரச்சினையை தவிர்க்கலாம். ஆனால் அவ்வாறு கொட்டகை அமைக்காமல் ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்வது வேதனை அளிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 15-ந் தேதி வரை கொள்முதல் செய்வார்கள். ஆனால் இந்த ஆண்டு கொள்முதல் இதுவரை முடிவடையவில்லை. இதனால் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்து கிடக்கின்றன. அவற்றை உடனுக்குடன் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பவும் நடவடிக்கை இல்லை.

நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்து கிடப்பதாலும், எடை இழப்பு ஏற்படுகிறது. எனவே நாங்கள் எப்படி எடை இழப்புக்கு பொறுப்பாக முடியும்? எடை இழப்பால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட கொள்முதல் நிலைய ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யக்கூடாது.

இவ்வாறு ஊழியர்கள் கூறினர்.

Next Story