நெல்லையில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு


நெல்லையில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 17 April 2019 9:30 PM GMT (Updated: 17 April 2019 7:08 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நெல்லையில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு லாரிகளில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

நெல்லை,

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. நெல்லை தொகுதியில் 26 வேட்பாளர்களும், தென்காசி தொகுதியில் 25 வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள். நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 2,979 வாக்குச்சாவடிகள் உள்ளன.

இந்த வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிவதற்கான எந்திரம் உள்ளிட்ட தேர்தல் உபகரணங்களை கொண்டு செல்ல 267 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த அலுவலர்கள் ஜீப்பில் செல்கிறார்கள். இவர்களை தொடர்ந்து லாரிகளில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்கின்ற வாகனங்கள் செல்கின்றன. இந்த வாகனத்தில் ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், 2 போலீசார், 2 ஊர்க்காவல் படைவீரர்கள், 2 முன்னாள் ராணுவத்தினர் ஆகியோர் சென்றனர்.

இந்த மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை ஏற்றி செல்லக்கூடிய வாகனங்கள் நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லை, பாளையங்கோட்டை, அம்பை, நாங்குநேரி, தென்காசி, ஆலங்குளம் உள்ளிட்ட தாலுகா அலுவலகங்களில் நேற்று அதிகாலை 5 மணிக்கே தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தன. காலை 10 மணிக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் இந்த வாகனங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மற்றும் ஓட்டுப்பதிவுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் போலீஸ் பாதுகாப்புடன் ஏற்றப்பட்டது. பின்னர் அந்த வாகனங்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு சென்று மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மற்றும் ஓட்டுப்பதிவுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

நெல்லை தாலுகா அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மற்றும் ஓட்டுப்பதிவுக்கு தேவையான அனைத்து உபகரணங்களை நெல்லை உதவி கலெக்டர் மணிஷ்நாரணவரே நேரடி மேற்பார்வையில் அனுப்பிவைக்கப்பட்டது. பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் இருந்து மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி நேரடி மேற்பார்வையில் அனுப்பிவைக்கப்பட்டது.

நெல்லை, பாளையங்கோட்டை பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றக்கூடிய பணியாளர்களுக்கு நேற்று காலையில் நெல்லை டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளி, வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் கல்லூரி ஆகிய இடங்களில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதையொட்டி அங்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. பணி நியமன ஆணை வாங்கிக்கொண்டு வாக்குச்சாவடிக்கு ஆசிரியர்கள் வர காலதாமதம் ஆன இடங்களில் மண்டல அலுவலர்கள் சென்று காத்து இருந்து ஓட்டுப்பதிவு எந்திரங்களை வழங்கினர்.ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தேவையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வாக்குச்சாவடி அலுவலர்கள் முன்னிலையில் தலையாரி மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் வாக்குச்சாவடிக்கு தேவையான ஏற்பாடுகளை செய்தனர். வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர், 200 மீட்டர் தூரத்திற்கு கோடு போட்டனர்.

நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுகின்ற ஆசிரியர்களுக்கு நேற்று வாக்குச்சாவடி பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் பணியாற்றிக்கொண்டு கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் வசித்து வருகின்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களுக்கு மாவட்ட எல்கையில் பணி கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அவர்களுக்கு வெகுதொலைவில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கிராமப்புறங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு பணி ஆணை பெற்றவர்கள் அங்கு எப்படி செல்வது என்று தெரியாமல் குழம்பிபோய் நின்றனர். அவர்கள் எப்படி செல்வது, எங்கே தங்குவது என்று தெரியாமல் திண்டாடினார்கள். பின்னர் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு செல்கின்ற ஊழியர்கள் ஒன்று சேர்ந்து காரில் ஏறிச் சென்றனர்.

Next Story