இலவச-கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் வேண்டுகோள்


இலவச-கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 17 April 2019 10:30 PM GMT (Updated: 17 April 2019 7:56 PM GMT)

இலவச-கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி.யில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று பெரம்பலூர் கலெக்டர் சாந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.

பெரம்பலூர்,

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப்பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் எல்.கே.ஜி. அல்லது ஆரம்ப வகுப்பில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்க விரும்பும் பெற்றோர் வருகிற 22-ந்தேதி முதல் அடுத்த மாதம் (மே) 18-ந்தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகமான பெரம்பலூர் மற்றும் வேப்பூர், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்ககம் ஆகிய மையங்களில் எவ்வித கட்டணங்களுமின்றி இலவசமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் சேர்க்க விரும்பும் பள்ளிகளில் விண்ணப்பங்களை பெற்றால் அதனை பள்ளியிலேயே இணையதளத்தில் பதிவு செய்து அதற்கான ஒப்புகைச் சீட்டினை பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு தனியார் சுயநிதி பள்ளியிலும் தகவல் பலகையில் அந்த பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்ட இடங்கள் குறித்து அறிவிப்பு இடம் பெற்றிருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்களை பெறப்படின் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும்.

வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்றவர், எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளியின் குழந்தை, மாற்றுத் திறனாளிகள் போன்றோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கள் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கைகான உத்தரவு வழங்கப்படும்.

இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது பிறப்பு சான்றிதழ், சாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கான சான்று, மாற்றுத் திறனாளி சான்று, மூன்றாம் பாலினத்தவருக்கான சான்று, ஆதரவற்றோர் சான்று போன்ற வற்றை கொண்டு வரவேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story