நித்திரவிளை அருகே ரேஷன் கடைகளில் 400 லிட்டர் மண்எண்ணெய் திருட்டு


நித்திரவிளை அருகே ரேஷன் கடைகளில் 400 லிட்டர் மண்எண்ணெய் திருட்டு
x
தினத்தந்தி 17 April 2019 10:15 PM GMT (Updated: 17 April 2019 8:22 PM GMT)

நித்திரவிளை அருகே 2 ரேஷன் கடைகளில் 400 லிட்டர் மண்எண்ணெயை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

நித்திரவிளை,

நித்திரவிளை அருகே உள்ள ஆலங்கோட்டில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் ஜெலஜா என்பவர் விற்பனையாளராக உள்ளார். இவர், விற்பனை முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்த போது, 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு பேரல் மண்எண்ணெய் திருட்டு போனது தெரிய வந்தது. இதுபற்றி ஜெலஜா நித்திரவிளை போலீசில் புகார் செய்தார்.

இதே போல் நம்பாழி பகுதியில் உள்ள ரேஷன் கடையிலும், 200 லிட்டர் மண்எண்ணெய் பேரல் திருடி செல்லப்பட்டது. இதுபற்றி விற்பனையாளர் பாபுராஜ் நித்திரவிளை போலீசில் புகார் செய்தார்.

இந்த 2 புகார் குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ரேஷன் கடை வளாகத்தில் வைத்திருந்த மண்எண்ணெய் பேரல்களை, வாகனம் கொண்டு வந்து தான் ஏற்றி சென்று இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள். எனவே 400 லிட்டர் மண்எண்ணெயை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story