வேலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - இந்து மக்கள் கட்சியினர் மனு


வேலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - இந்து மக்கள் கட்சியினர் மனு
x
தினத்தந்தி 17 April 2019 10:30 PM GMT (Updated: 17 April 2019 10:16 PM GMT)

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் இந்து மக்கள் கட்சி(தமிழகம்) தலைவர் அர்ஜூன் சம்பத் மனு கொடுத்தார்.

திருப்பூர்,

இந்து மக்கள் கட்சி (தமிழகம்) தலைவர் அர்ஜூன் சம்பத் தனது கட்சியினருடன் நேற்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிக்கு அனுப்பி வைக்குமாறு, மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமாரிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், தனது தந்தை, உறவினர்கள் மூலமாக வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ய திட்டமிட்டு செயல்பட்டார். வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கோடிக்கணக்கில் கட்டுக்கட்டாக பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. இது தமிழகத்தை தலைகுனிய செய்துள்ளது. ஒரு தொகுதியில் ஒரு வேட்பாளர் தவறு செய்தால் அவர் மீது நடவடிக்கை எடுப்பது தான் சரியாக இருக்கும். மாறாக தேர்தலை ரத்து செய்வது அநீதியாகும். எனவே தேர்தல் ரத்து உத்தரவை திரும்ப பெற்று, தி.மு.க. வேட்பாளரை தகுதி நீக்கம் செய்து வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தலை நடத்த வேண்டும்.

தேர்தல் ஆணையத்தில் ஊடுருவியுள்ள ஜாக்டோ -ஜியோ சங்கத்தினர் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக திட்டமிட்டு அறிக்கைகளை அனுப்புகிறார்கள். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கனிமொழி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்து வெற்றி பெற நினைக்கிறார்கள்.

எனவே தி.மு.க. வேட்பாளர் கனிமொழியை தகுதி நீக்கம் செய்து தூத்துக்குடி தொகுதியில் வாக்குப்பதிவை நடத்த வேண்டும். தமிழகம் முழுவதும் இந்து இயக்கங்களின் தொண்டர்கள், அ.தி.மு.க. தொண்டர்கள் தாக்கப்படுகிறார்கள். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

Next Story