மேட்டூர் அருகே அனல்மின்நிலைய பொறியாளர் கார் கவிழ்ந்து பலி வாக்குச்சாவடி பணிக்கு மனைவியை விட்டுவிட்டு திரும்பிய போது பரிதாபம்

மேட்டூர் அருகே அனல் மின்நிலைய பொறியாளர் கார் கவிழ்ந்து பலியானார். அவர் வாக்குச்சாவடி பணிக்கு மனைவியை விட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பிய போது பரிதாபமாக இறந்தார்.
மேட்டூர்,
சேலம் மாவட்டம், மேட்டூர் அனல்மின்நிலையத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்தவர் குமரேசன் (வயது 50). இவருடைய மனைவி புனிதவள்ளி, அரசு பள்ளி ஆசிரியை.
இவருக்கு தேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலையில் தேவூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது மனைவி புனிதவள்ளியை, குமரேசன் காரில் கொண்டு வந்து விட்டார்.
பின்னர் அவர் தனது காரை மேட்டூரில் உள்ள தனது வீட்டுக்கு ஓட்டி வந்தார். மேட்டூர் அருகே உள்ள சாணாவூர் பகுதியில் வரும் போது, சாலையோர கல்லில் ஏறி எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கார் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த குமரேசன் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கணவர் விபத்தில் பலியான தகவல் வாக்குச்சாவடி பணியில் இருந்த ஆசிரியை புனிதவள்ளிக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே மேட்டூருக்கு வந்து தனது கணவரின் உடலை பார்த்து கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.
இந்த விபத்து குறித்து மேட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






