காஞ்சீபுரம், திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்


காஞ்சீபுரம், திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்
x
தினத்தந்தி 18 April 2019 10:45 PM GMT (Updated: 18 April 2019 6:51 PM GMT)

காஞ்சீபுரம், திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதியில் நேற்று விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். பெரிய காஞ்சீபுரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டது. பழுது சரிசெய்யப்பட்ட பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் அங்கு ½ மணி நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது.

தேர்தல் விதிப்படி, சிறிது தூரம் தள்ளி நிற்கவேண்டும் என்று கூறியதால் காஞ்சீபுரம் திருக்காலிமேடு பகுதியில் அ.ம.மு.க. நிர்வாகிகளுக்கும், தேர்தல் அதிகாரிகளுக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. காஞ்சீபுரத்தை அடுத்த முத்தியால்பேட்டை, அய்யம்பேட்டை போன்ற பகுதிகளில் கட்சியினர் கரைவேட்டி கட்டிகொண்டு ஓட்டுபோட உள்ளே வரகூடாது என்று தேர்தல் அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. இதையொட்டி, அந்த வாக்குச்சாவடிகளில், பதற்றமான சூழ்நிலை நிலவியது.

காஞ்சீபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. தேன்மொழி, காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்ஹதிமானி, நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர்கள் ராஜாங்கம், சுரேஷ்சண்முகம், ரஜினிகாந்த், வெற்றிச்செல்வன் மற்றும் போலீசாரும் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளியில் காலை 7 மணியளவில் பொதுமக்கள் வாக்களிக்க நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டதை தொடர்ந்து வாக்களிக்க முடியாமல் பொதுமக்கள் அவதியுற்றனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் வாக்குப்பதிவு எந்திரத்தை சரிசெய்த பின்னர் காலை 8 மணி முதல் பொதுமக்கள் தங்கள் வாக்கினை செலுத்தினர். திருவள்ளூரை அடுத்த காக்களூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியிலும் வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து காலை 7 மணியளவில் பொதுமக்கள் வாக்களிக்க முடியாமல் நீண்ட வரிசையில் நின்றனர். அப்போது அதிகாரிகள் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்து அமர வைத்தனர். காலை 8¾ மணியளவில் வாக்குப்பதிவு எந்திரம் சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. திருவள்ளூரை அடுத்த புட்லூரில் உள்ள வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு எந்திர கோளாறு காரணமாக ½ மணி நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது.

திருவள்ளூரை அடுத்த திருவூர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் வைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் கோளாறு ஏற்பட்டது. இதனால் வாக்களிக்க வந்த முதியவர்கள், பெண்கள் என பலதரப்பட்டவர்களும் வாக்களிக்க முடியாமல் நீண்ட வரிசையில் நின்றனர்.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் 2 மணி நேரம் போராடியும் அந்த வாக்குப்பதிவு ஏந்திரத்தை சரிசெய்ய முடியவில்லை. இதைத்தொடர்ந்து அந்த வாக்குப்பதிவு எந்திரம் மாற்றப்பட்டு புதிய எந்திரம் கொண்டுவரப்பட்டு 2 மணி நேரம் காலதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.


Next Story