தஞ்சை பழைய கலெக்டர் அலுவலகம் அருகே குடிபோதையில் ஷேர் ஆட்டோவை மரத்தில் மோதிய டிரைவர் பயணிகள் அதிர்ச்சி


தஞ்சை பழைய கலெக்டர் அலுவலகம் அருகே குடிபோதையில் ஷேர் ஆட்டோவை மரத்தில் மோதிய டிரைவர் பயணிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 18 April 2019 10:45 PM GMT (Updated: 18 April 2019 7:06 PM GMT)

தஞ்சை பழைய கலெக்டர் அலுவலகம் அருகே குடிபோதையில் ஷேர் ஆட்டோவை மரத்தில் டிரைவர் மோதினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை கோர்ட்டு சாலையில் பழைய கலெக்டர் அலுவலகம் உள்ளது. இந்த சாலை வழியாக நேற்று காலை 10.30 மணி அளவில் ஷேர் ஆட்டோ ரெயில் நிலையம் நோக்கி வந்து கொண்டு இருந்தது. ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் குடிபோதையில் இருந்தார். ஆட்டோவில் ஒரு பெண், ஒரு வாலிபர் குழந்தையுடன் இருந்தார்.

ஷேர் ஆட்டோ பழைய கலெக்டர் அலுவலகம் அருகே தாறுமாக வந்ததுடன், சாலை ஓரத்தில் இருந்த நடைபாதையின் மீது ஏறி இறங்கியது. இதனால் அதில் இருந்த பயணிகளும், சாலையில் நடந்த சென்ற பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஷேர் ஆட்டோ அருகில் இருந்த மரத்தில் மோதி நின்றது. இதில் குழந்தையுடன் இருந்த வாலிபருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. பெண் காயம் இன்றி தப்பினார்.

குடிபோதையில் இருந்த டிரைவரால் ஆட்டோவில் இருந்து இறங்க முடியவில்லை. இதற்கிடையில் ஷேர் ஆட்டோவின் டீசல் டேங்கில் இருந்து டீசல் கீழே கொட்டியது. அப்போது அந்த வழியாக தஞ்சை சரக டி.ஐ.ஜி.லோகநாதன் வந்தார். அவர் இறங்கி வந்து தஞ்சை போக்குவரத்து குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் போலீசார் அங்கு வந்து குடிபோதையில் இருந்த ஆட்டோ டிரைவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். மேலும் ஷேர் ஆட்டோவையும் போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story