வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 18 April 2019 10:30 PM GMT (Updated: 18 April 2019 8:05 PM GMT)

வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், தாதம்பேட்டை கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி கடந்த 13-ந் தேதி வாஸ்து ஹோமமும், சாமி வீதி உலாவும், 15-ந் தேதி கருடசேவை புறப்பாடும், அன்று மாலை அனுமந்த வாகனத்தில் வீதிஉலாவும், நேற்று முன்தினம் பெருமாளுக்கு உற்சவர் விக்ரஹ சடாரி பிரதிஷ்டையும், மாலையில் பெருமாள் நெல் அளவை கண்டருளுதலும், சூர்ணாபிஷேகமும், குதிரை வாகனத்தில் வீதி உலாவும் நடைபெற்றது.

தேரோட்டம்

நேற்று ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் வரதராஜ பெருமாள் வைக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது. மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story