எனது வெற்றி உறுதி செய்யப்பட்டு உள்ளது பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


எனது வெற்றி உறுதி செய்யப்பட்டு உள்ளது பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 18 April 2019 11:00 PM GMT (Updated: 18 April 2019 9:08 PM GMT)

எனது வெற்றி உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ஜனதா வேட்பாளராக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவர் நேற்று காலை 9.30 மணியளவில் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மகளிர் உயர்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்திய திருநாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் வகையில் ஜனநாயக தேர்தல் திருவிழா, இன்று (நேற்று) நடக்கிறது. நாடாளுமன்றத்துக்கான 2-ம் கட்ட தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. குமரி மாவட்டத்தில் நான் எனது வாக்குரிமையை நிறைவேற்றி விட்டேன். இந்த தேர்தல் குமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் எதிர்காலத்தில் இளைஞர்களின் வளர்ச்சியை, எழுச்சியை உறுதி படுத்தும் தேர்தலாக அமைந்துள்ளது.

மாவட்டம் முழுவதும் ஒரு மிகப்பெரிய மவுன புரட்சி ஏற்பட்டு கொண்டிருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இந்த மாவட்டத்துக்கு வளர்ச்சி கட்டாயம் தேவை என்ற முறையில் புதிய வாக்காளர்கள், இளைஞர்கள் அத்தனை பேரும் தேசிய ஜனநாயக கூட்டணியான பா.ஜனதா கட்சிக்கு தாமரை சின்னத்தில் வாக்களிப்பதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனது வெற்றி உறுதி செய்யப்பட்டு உள்ளது. நான் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோகன் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.

Next Story