பல்லடம் அருகே திருமணமான ஒரு வாரத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பல்லடம் அருகே திருமணமான ஒரு வாரத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 19 April 2019 10:45 PM GMT (Updated: 19 April 2019 7:30 PM GMT)

பல்லடம் அருகே திருமணமான ஒரு வாரத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பல்லடம், 

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள காளக்குடி பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி, லாரி டிரைவர். இவருடைய மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு சுப்புலட்சுமி (வயது 19), சுதா மற்றும் சந்தனதேவி ஆகிய 3 மகள்கள் உள்ளனர். பொன்னுசாமி தனது குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உப்பிலிபாளையம் அக்ரி காலனி பகுதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சுப்புலட்சுமிக்கு திருமணம் செய்து வைக்க அவருடைய பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி பல்லடம் பகுதியில் வசித்து வந்த பொன்னுச்சாமியின் உறவினரான தங்கராஜ் (24) என்பவருக்கு சுப்புலட்சுமியை திருமணம் செய்து கொடுக்க பேசி முடித்தனர். தங்கராஜ் அந்த பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். திருமணம் குறித்து பேசும்போதே, சுப்புலட்சுமி தனது பெற்றோரிடம், “தான் சின்ன பெண்ணாக இருப்பதால் தனக்கு திருமணம் வேண்டாம் என்றும், திருமணத்தில் விருப்பம் இல்லை” என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனாலும் சுப்புலட்சுமியின் விருப்பத்திற்கு மாறாக, தங்கராஜிக்கும்-சுப்புலட்சுமிக்கும் கடந்த வாரம் தடபுடலாக திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு புதுமண தம்பதிகள் பல்லடம் அருள்புரம் உப்பிலிபாளையம் அக்ரி காலனியில் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள கடைக்கு தங்கராஜ் சென்று இருந்தார். இதனால் வீட்டில் சுப்புலட்சுமி மட்டும் தனியாக இருந்தார்.

சிறிது நேரத்திற்கு பிறகு வீட்டிற்கு தங்கராஜ் சென்றார். அப்போது வீட்டுக்குள் சுப்புலட்சுமி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சல்போட்டார். அவருடைய சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து, சுப்புலட்சுமியை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே பல்லடம் போலீசார் விரைந்து சென்று சுப்புலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை அறைக்கு அனுப்பிவைத்தனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் சுப்புலட்சுமியின் பெற்றோர் பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சுப்புலட்சுமியின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. அதன்பின்னர் சுப்புலட்சுமியின் தந்தை பல்லடம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விசாரணையில் திருமணத்தில் விருப்பம் இல்லாததால் சுப்புலட்சுமி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.

Next Story