மதுரை மருத்துவ கல்லூரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளுக்கு சீல் வைப்பு - 3 அடுக்கு பாதுகாப்பு


மதுரை மருத்துவ கல்லூரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளுக்கு சீல் வைப்பு - 3 அடுக்கு பாதுகாப்பு
x
தினத்தந்தி 19 April 2019 11:08 PM GMT (Updated: 19 April 2019 11:08 PM GMT)

மதுரை மருத்துவ கல்லூரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. சித்திரை திருவிழா நடந்ததால் மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு மட்டும் ஓட்டுப்பதிவு 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டு இரவு 8 மணி வரை நடந்தது. மொத்தம் 65.83 சதவீதம் வாக்குபதிவாகி இருந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இறுதியாக வாக்குசதவீதம் 65.77 என தெரியவந்துள்ளது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்கு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மதுரை மருத்துவ கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது.

இங்கு மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை மத்தி, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மேலூர் என 6 சட்டமன்ற தொகுதி வாரியாக அறைகள் ஒதுக்கப்பட்டு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய இந்த பணி நேற்று காலை 6.30 மணி வரை நடந்தது.

அதன்தொடர்ச்சியாக காலை 11 மணியளவில் அந்த 6 அறைகளை வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஏஜெண்டுகள், கலெக்டர் நடராஜன் ஆகியோர் முன்னிலையில் தேர்தல் பொது பார்வையாளர் வினோத்குமார் சீல் வைத்தார். பின்னர் அந்த அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுதவிர மருத்துவ கல்லூரி வளாகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதால் 24 மணி நேரமும் மத்திய போலீசாரும், மாநில போலீசாரும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

Next Story