தானிப்பாடியில் குழந்தை திருமணம் செய்யப்பட்ட சிறுமி மீட்பு காப்பகத்தில் ஒப்படைப்பு

தானிப்பாடியில் குழந்தை திருமணம் செய்யப்பட்ட சிறுமி மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 18–ந் தேதி நடைபெற்றது. அப்போது திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு ஒருவர் பேசினார். அதில் பேசிய நபர் திருவண்ணாமலை அருகில் உள்ள தானிப்பாடியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடைபெற்றதாக கூறினார். இதுகுறித்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கிறிஸ்டினா டார்த்தி மேற்பார்வையிலான அலுவலர்கள் தானிப்பாடிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது குழந்தை திருமணம் நடைபெற்ற சிறுமியின் பெற்றோர் முன்னுக்குபின் முரணாக தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில், 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்யப்பட்டு உள்ளதும், அந்த சிறுமி தர்மபுரியில் உள்ள அவரது அண்ணன் வீட்டில் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோரை சமூக நலத்துறை அலுவலர்களை தானிப்பாடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் குழந்தை திருமணம் நடைபெற்ற சிறுமியை உடனடியாக தானிப்பாடிக்கு அழைத்து வர வேண்டும் என உத்தரவிட்டனர். பின்னர் அந்த சிறுமி தர்மபுரியில் இருந்து தானிப்பாடிக்கு அழைத்து வரப்பட்டார்.
அதைத்தொடர்ந்து சமூக நலத்துறை அலுவலர்கள் சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் தேர்தல் பணியின் போதும் தனது கடமையை செய்த சமூக நலத் துறை அலுவலர்களை மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கிறிஸ்டினா டார்த்தி பாராட்டினார்.






