புதுக்கோட்டை அருகே கலவரம்: 1000 பேர் மீது வழக்குப்பதிவு போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்


புதுக்கோட்டை அருகே கலவரம்: 1000 பேர் மீது வழக்குப்பதிவு போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 20 April 2019 11:15 PM GMT (Updated: 20 April 2019 6:34 PM GMT)

புதுக்கோட்டை அருகே கலவரம் தொடர்பாக 1000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை,

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியின் சுயேச்சை வேட்பாளரான செல்வராஜையும், அவர் சார்ந்த சமூகத்தையும் 2 பேர் அவதூறாக பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த ஆடியோவில் உள்ள 2 பேரையும் கைது செய்ய வேண்டும் எனக்கூறி கடந்த 18-ந் தேதி இரவு அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் நடவடிக்கை எடுக்க தாமதம் ஆனதால், அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் மீண்டும் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள், அவதூறாக பேசிய ஆடியோ வெளியிட்ட 2 பேரையும் கைது செய்ய வலியுறுத்தி பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் போலீஸ் நிலையம், போலீசார் மற்றும் போலீஸ் வாகனங்கள் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் 6 போலீஸ் வாகனங்கள் சேதமடைந்தன. மேலும் 3 போலீசார் உள்பட 13 பேர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து பொன்னமராவதி, திருமயம், அன்னவாசல், புதுக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதில் புதுக்கோட்டை அருகே சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 3 அரசு பஸ்களின் கண்ணாடியை உடைத்தனர். இதைத்தொடர்ந்து பொன்னமராவதி தாலுகா பகுதிக்கு மட்டும் இன்று (ஞாயிற்றுக் கிழமை) நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறபித்து, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து பொன்னமராவதி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து அந்த பகுதிகளில் அமைதி நிலவுவதற்காகவும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதற்காகவும், அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் பொன்னமராவதி தாசில்தார் பாலகிருஷ்ணன் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், நேற்று முன்தினம் கலவரத்தில் ஈடுபட்ட பொன்னமராவதி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 1000 பேர் மீது பொது சொத்துகளை சேதப்படுத்தியது, அரசு வாகனங்களை சேதப்படுத்தியது உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் பொன்னமராவதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் பொன்னமராவதிக்கு வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால் அனைத்து பஸ்களும் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் லாரி உள்ளிட்ட வாகனங்களும் இயக்கப்படவில்லை. பின்னர் மாலையில் புதுக்கோட்டையில் இருந்து 4 அரசு பஸ்கள் மட்டும் பொன்னமராவதிக்கு போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. இதேபோல நேற்று மதியத்திற்கு பிறகு பொன்னமராவதியில் உள்ள சில கடைகள் திறக்கப்பட்டன. இருப்பினும் பொன்னமராவதி பஸ் நிலையம் மற்றும் கடைவீதிகள் வெறிச்சோடி காணப் பட்டது.

பொன்னமராவதியில் ஆங்காங்கே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதால், பொன்னமராவதி பகுதியே பரபரப்பாக காட்சி அளிக்கிறது. போலீசார் பொன்னமராவதியில் உள்ள மண்டபங்களில் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொன்னமராவதி பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

Next Story