துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தல்: விமான நிலையத்தில் ரூ.34 லட்சம் தங்கம் பறிமுதல் ரூ.1½ லட்சம் விலை உயர்ந்த சிகரெட் பாக்கெட்டுகளும் சிக்கியது


துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தல்: விமான நிலையத்தில் ரூ.34 லட்சம் தங்கம் பறிமுதல் ரூ.1½ லட்சம் விலை உயர்ந்த சிகரெட் பாக்கெட்டுகளும் சிக்கியது
x
தினத்தந்தி 21 April 2019 10:30 PM GMT (Updated: 21 April 2019 4:34 PM GMT)

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.34½ லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த சிகரெட் பாக்கெட்டுகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்தனர். மேலும் 4 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்திவரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள், விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது துபாயில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில், சுற்றுலா விசாவில் துபாய் சென்றுவிட்டு திரும்பிய கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முகமது கவுஸ் (வயது 37), திருச்சியை சேர்ந்த அப்சர் அலி(27) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

இருவரும் அதிகாரிகளிடம் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், 2 பேரின் உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை. பின்னர் இருவரையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.

அதில் 2 பேரும் தங்கள் உள்ளாடைகளுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.34 லட்சத்து 59 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 63 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் துபாயில் இருந்து சென்னை வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த 3 பேரின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 3 பேரும் கடத்தி வந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த சிகரெட் பாக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஒரே நாளில், ரூ.34 லட்சத்து 59 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக திருச்சியை சேர்ந்த அப்சர் அலியை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். மற்ற 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story