சூளகிரி அருகே விவசாய பயிர்களை தின்று 7 யானைகள் அட்டகாசம் கிராம மக்கள் அச்சம்


சூளகிரி அருகே விவசாய பயிர்களை தின்று 7 யானைகள் அட்டகாசம் கிராம மக்கள் அச்சம்
x
தினத்தந்தி 21 April 2019 10:15 PM GMT (Updated: 21 April 2019 4:42 PM GMT)

சூளகிரி அருகே 7 யானைகள் முகாமிட்டு பயிர்களை தின்றும், மிதித்தும் அட்டகாசம் செய்தன. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக 20-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. அவை பல குழுக்களாக ராமாபுரம், பாத்தகோட்டா, சானமாவு, பீர்ஜேப்பள்ளி, காமன்தொட்டி, அத்திமுகம், கோபசந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் 7 யானைகள் சூளகிரி அருகே உள்ள அத்திமுகம், காமன்தொட்டி பகுதிக்கு வந்தன. அவை அங்கு விவசாய தோட்டத்தில் இருந்த முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்தன. தொடர்ந்து காமன்தொட்டி ஏரிக்கு சென்ற யானைகள் அங்கு ஏரியில் இறங்கி உற்சாக குளியல் போட்டன.

பின்னர் யானைகள் அந்த பகுதியில் உள்ள மாந்தோப்பு ஒன்றுக்குள் சென்றன. யானைகள் வந்த தகவல் அறிந்து வனத்துறையினர் அங்கு சென்று அவற்றை சானமாவு காட்டிற்கு விரட்டினார்கள். காமன்தொட்டியை சுற்றி யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்து உள்ளனர். அவர்கள் இந்த யானைகளை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விரட்டிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story