வெள்ளோடு அருகே வாய்க்காலில் இழுத்து செல்லப்பட்டு தொழிலாளி சாவு


வெள்ளோடு அருகே வாய்க்காலில் இழுத்து செல்லப்பட்டு தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 21 April 2019 10:00 PM GMT (Updated: 21 April 2019 5:28 PM GMT)

வெள்ளோடு அருகே வாய்க்காலில் இழுத்து செல்லப்பட்டு தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கொடுமுடி, 

வெள்ளோடு அருகே உள்ள கள்ளுக்கடைமேட்டை சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது 48). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி சாந்தி (38). இவர்களுக்கு சக்திவேல் (20) என்ற மகனும், கலையரசி (19) என்ற மகளும் உள்ளனர். இதில் சக்திவேல் பி.இ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கலையரசி பாலிடெக்னிக் படித்து வருகிறார்.

அர்ஜுனன் கடந்த 13-ந் தேதி வேலையை முடித்துவிட்டு அந்த பகுதியில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலுக்கு குளிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் வாய்க்காலுக்கு தேடி சென்று பார்த்தனர்.

அப்போது அவரது துணிகள் மட்டும் கரையில் இருந்தது. அவரை காணவில்லை. வாய்க்காலில் ஆழமான பகுதியில் இறங்கி அர்ஜுனன் குளித்துள்ளார். ஆனால் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி இழுத்து செல்லப்பட்டார் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அர்ஜுனன் கொடுமுடி அருகே சுமைதாங்கிபுதூரில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் பிணமாக மிதப்பதை பார்த்தனர்.

இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டனர். பிணம் மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டு துர்நாற்றம் வீசியது.

இதனால் கொடுமுடி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அங்கு வந்து உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story