பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.15 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை


பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.15 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
x
தினத்தந்தி 21 April 2019 9:30 PM GMT (Updated: 21 April 2019 5:45 PM GMT)

நத்தக்காடையூர் அருகே பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.15 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.

முத்தூர்,

நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் புகழ் பெற்ற காங்கேயம் இன காளைகள், கன்றுகள், மாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை மாவட்டங்களை சேர்ந்த காங்கேயம் இன காளைகள் வளர்ப்போர், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், காங்கேயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள் காங்கேயம் இன பெரிய பூச்சி காளைகள், இளம் பூச்சி காளைகள், செவலை பசுமாடுகள் மயிலை பூச்சிகாளைகள், மயிலை மாடுகள், மயிலை கிடாரிகள், காராம்பசு கிடாரி கன்றுகள் ஆகிய காங்கேயம் இனங்களை மட்டும் விற்பனைக்காக கொண்டு வந்து விற்று பயன் அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் வெள்ளகோவில் அருகே உள்ள கண்ணபுரத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் நடைபெறும் புகழ் பெற்ற கண்ணபுரம் மாட்டுச்சந்தையால் கடந்த 2 வாரங்களாக இந்த சந்தைக்கு காங்கேயம் இன நாட்டு பசுமாடுகள், கன்றுகள், காளைகள் வரத்து குறைந்தது. இந்த நிலையில் கண்ணபுரம் மாட்டுச்சந்தை முடிவடைந்ததை தொடர்ந்து இந்த சந்தைக்கு வழக்கம்போல் மொத்தம் 81 காங்கேயம் இன நாட்டு மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

இதில் காங்கேயம் இன நாட்டு பசுமாடுகள், கன்றுகள், காளைகள் என ரகம் வாரியாக தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதன்படி ஒரே நாளில் மொத்தம் 36 நாட்டு மாடுகள் விற்பனை செய்யப்பட்டன. சந்தையில் அதிகபட்சமாக 9 மாத சினையுடன் காங்கேயம் இன மயிலை பசுமாடு ரூ.75 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரே நாளில் இந்த சந்தையில் மொத்தம் ரூ.15 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை நடைபெற்றது. இந்த சந்தையில் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த காங்கேயம் இன காளைகள், மாடுகள் வளர்க்கும் விவசாயிகள், வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story