இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு: தூத்துக்குடி கடலோரங்களில் தீவிர கண்காணிப்பு தீவுகளில் போலீசார் சோதனை


இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு: தூத்துக்குடி கடலோரங்களில் தீவிர கண்காணிப்பு தீவுகளில் போலீசார் சோதனை
x
தினத்தந்தி 21 April 2019 10:00 PM GMT (Updated: 21 April 2019 6:51 PM GMT)

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக தூத்துக்குடியில் கடலோரங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி, 

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக தூத்துக்குடியில் கடலோரங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

குண்டுவெடிப்பு

இலங்கையில் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் ஓட்டல்கள் உள்பட 7 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்து உள்ளது. இதில் பலர் இறந்து உள்ளனர். இந்த பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தியவர்கள் கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதனால் தமிழக கடலோர பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

கண்காணிப்பு

தூத்துக்குடி கடலோர காவல்படை ரோந்து கப்பல்கள், கடலோர பாதுகாப்பு போலீசார் கடல் பகுதியில் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். அதே போன்று கடற்கரையோரங்களில் உள்ள போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசார் மீனவ கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சந்தேகப்படும்படியாக யாரேனும் சுற்றித்திரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளனர்.

தீவுகளில் சோதனை

மேலும் தூத்துக்குடி தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன், சப்-இன்ஸ்பெக்டர் டொமிலன் மற்றும் போலீசார் நடுக்கடலில் வரும் மீனவர்களின் படகுகளையும் தீவிரமாக கடலோர பாதுகாப்பு போலீசார் சோதனை செய்து வருகின்றனர். தூத்துக்குடி கடல் பகுதியில் உள்ள வான்தீவு, காசுவாரி தீவு, பாண்டியன் தீவு உள்ளிட்ட தீவுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Next Story