தஞ்சை அருகே வெள்ளரிக்காய் அறுவடை பணிகள் தீவிரம் 100 காய்கள் ரூ.300-க்கு விற்பனை


தஞ்சை அருகே வெள்ளரிக்காய் அறுவடை பணிகள் தீவிரம் 100 காய்கள் ரூ.300-க்கு விற்பனை
x
தினத்தந்தி 21 April 2019 10:30 PM GMT (Updated: 21 April 2019 7:23 PM GMT)

தஞ்சை அருகே வெள்ளரிக்காய் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 100 காய்கள் ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கி விட்டதால் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னிநட்சத்திரம் அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி தொடங்குகிறது. வழக்கமாக அக்னி நட்சத்திர காலக்கட்டத்தில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும்.

ஆனால் தற்போது ஏப்ரல் மாதத்திலேயே வெயில் சுட்டெரித்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக 102 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

மக்களும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ள இளநீர், நுங்கு, வெள்ளரி, குளிர்பானம் போன்றவற்றை அதிக அளவில் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் சாலையோரங்களில் தற்காலிக கடைகளில் நுங்கு மற்றும் இளநீர், வெள்ளரி விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.

தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, கண்டியூர், அரசூர், திருச்சோற்றுத்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளரி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் 500 ஏக்கர் வரை வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த வெள்ளரி 3 மாத பயிர் ஆகும்.

வெள்ளரி விதை போடப்பட்டு 50 நாட்களில் காய்கள் அறுவடைக்கு வந்து விடும். தற்போது இந்த வெள்ளரி அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அறுவடை செய்யப்படும் வெள்ளரிக்காய்களை வியாபாரிகள், நேரடியாக வந்து கொள்முதல் செய்து செல்கிறார்கள். அதுவும் விவசாயிகள் அறுவடை செய்யும் இடத்திற்கே வந்து கொள்முதல் செய்கிறார்கள்.

தினமும் காலை நேரங்களில் 6 மணி முதல் 9 மணி வரை இந்த அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. 1 வெள்ளரிக்காய் ரூ.3-க்கு கொள்முதல் செய்கிறார்கள். அதாவது 100 காய்கள் ரூ.300-க்கு கொள்முதல் செய்கிறார்கள். தஞ்சை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்து வெள்ளரிக்காய்களை வாங்கிச்செல்கிறார்கள்.

இது குறித்து வெள்ளரி சாகுபடி செய்துள்ள விவசாயி கூறுகையில், “வெள்ளரிக்காய் கடந்த ஆண்டை போல தான் கொள்முதல் செய்கிறார்கள். தற்போது கோடைகாலம் என்பதால் அறுவடை செய்த உடனேயே கொள்முதல் செய்து சென்று விடுகிறார்கள். இதனால் நாங்கள் எங்கும் எடுத்துச்செல்ல வேண்டியதில்லை. 1 ஏக்கருக்கு 500 முதல் 600 காய்கள் வரை விளைச்சல் ஆகும். தினமும் வெள்ளரிக்காய்கள் அறுவடை செய்து வருகிறோம். நாங்கள் ஆண்டுதோறும் வெள்ளரி சாகுபடி செய்து வருகிறோம்.”என்றார்.

Next Story