கவுந்தப்பாடி அருகே சந்தன மரங்களை வெட்டி கடத்த முயற்சி 2 பேர் கைது


கவுந்தப்பாடி அருகே சந்தன மரங்களை வெட்டி கடத்த முயற்சி 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 April 2019 10:00 PM GMT (Updated: 22 April 2019 7:07 PM GMT)

கவுந்தப்பாடி அருகே சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கவுந்தப்பாடி,

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள ரங்கன்காட்டூர் என்ற இடத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 32). இவருக்கு சொந்தமான தோட்டம் அந்த பகுதியில் உள்ளது. இங்கு சுமார் 10 ஆண்டுகள் ஆன சந்தன மரங்கள் மற்றும் தென்னை மரங்களை அருண்குமார் வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அருண்குமாரின் தோட்டத்தில் இருந்து சத்தம் கேட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது மர்மநபர்கள் 3 பேர் சந்தன மரங்களை வெட்டிக்கொண்டிருந்தனர்.

பொதுமக்களை பார்த்ததும் 3 பேர் அங்கிருந்து தப்பித்து ஓடினார்கள். இதனால் அவர்களை துரத்தி சென்றனர். இதில் 2 பேர் மட்டும் பிடிபட்டனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

இவர்களை கவுந்தப்பாடி போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஒருவர் அந்தியூர் மணல்காடு என்ற இடத்தை சேர்ந்த கார்த்தி (வயது 24) என்பதும், மற்றொருவர் எண்ணமங்கலம் விராலிக்காட்டூரை சேர்ந்த கதிர்வேல் (23) என்பதும், தப்பி ஓடியவர் முருகேசன் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் திலீப் வழக்குப்பதிவு செய்து கார்த்தி, கதிர்வேல் ஆகியோரை கைது செய்தார். தப்பி ஓடிய முருகேசனை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story